உள்ளூர் செய்திகள்

பொங்கல் வைப்பது எப்படி?

பொங்கல் திருநாளில் கண்கண்ட தெய்வமான சூரியனுக்கு முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம்.பொங்கலை வீட்டு வாசலில் வைப்பது சிறப்பு. வாசலில் திருவிளக்கை ஒரு பலகையிட்டு அதன் மேல் வையுங்கள். பூ சூட்டுங்கள். விளக்கின் முன் வாழை இலை விரித்து, முதலில் சாணப்பிள்ளையாரை ஒரு ஓரமாகவும், செம்மண்ணைப் பிடித்து அதை அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி, பனங்கிழங்கு, காய்கறிகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படையுங்கள். இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய் சேர்த்த காப்பரிசியைத் தயாரித்து ஒரு கிண்ணத்தில் வையுங்கள். இனி பொங்கல் வைக்க தயாராக வேண்டும். பொங்கல்கட்டி எனப்படும் கற்களைக் கொண்டு அடுப்பு உருவாக்கலாம். மண் அடுப்புகளையும் பயன்படுத்தலாம். பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். ஒரு தேங்காயை உடைத்து தண்ணீரை பானையில் விடுங்கள். சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள். பனை அல்லது தென்னை ஓலை கிடைத்தால் அதைக் கொண்டு அடுப்பு எரிக்கலாம். கிடைக்காதவர்கள் சுள்ளி விறகுகளைப் பயன்படுத்தலாம். மண்ணெண்ணெய் விட்டு, அடுப்பு பற்ற வைப்பதைத் தவிர்க்கவும். காய்ந்த விறகுகளைத் தேர்ந்தெடுங்கள்.பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றுங்கள். இத்துடன் சிறிது பசும்பால் சேர்க்கலாம். தண்ணீர் கொதித்து பொங்கியவுடன் குலவையிடுங்கள் அல்லது 'பொங்கலோ பொங்கல்' என்று முழங்குங்கள். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி பொங்க இருக்கிறோமோ, அந்தளவுக்கு முகர்ந்து விட்டு பச்சரிசி இடுங்கள். நேரம் செல்லச் செல்ல அடுப்பில் தீயின் அளவைக் குறைப்பது அவசியம். இல்லாவிட்டால் சோறு பானையில் பிடித்து விடும். பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள். பின்பு அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் வையுங்கள்.பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து, பூஜை செய்யுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், பாடல்களைப் பாடுங்கள். பின்னர் இவற்றை வீட்டுக்குள் எடுத்துச் சென்று விடலாம். முதலில் பொங்கல், பழம், காப்பரிசி ஆகியவற்றை வாழை இலையில் வைத்து காகத்துக்கு வைக்க வேண்டும். மதிய வேளையில், காய்கறி சமைத்ததும் திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைக்க வேண்டும். அதை முன்னோருக்கு சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும். பிறகு குடும்பத்தார் கூடி அமர்ந்து சாப்பிட வேண்டும்.