கொலு பாருங்க! வாழ்வில் முன்னேறுங்க!
நவராத்திரியில் கொலு அமைத்து வழிபடுகிறோம். 'கொலு' என்றால் அழகு. பலவித கோலங்களில் அம்மன் அழகுடன் காட்சியளிப்பதால் 'கொலு' எனப் பெயர் வந்தது.கலசத்தில் அம்பிகை: கொலு வைப்பதற்கு முன்பு வீட்டை சுத்தமாக்கி, வண்ணக்கோலம் இடுவர். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவர். மரப்பலகை அல்லது அட்டைகளால் மண்டபம் அமைத்து அதன் நடுவில் உயரமான பலகையை சிம்மாசனமாக அமைப்பர். அதன் மீது பட்டுப்புடவை விரித்து மண் அல்லது உலோகத்தால் ஆன அம்மன் சிலையை வைப்பர். வலப்புறத்தில் கலசம் வைத்து அதை அம்மனாக பாவித்து வழிபடுவர். அடுக்கும் விதம்: ஒன்று முதல் ஆறாம் படி வரை ஓரறிவு முதல் ஆறறிவு உயிர்களை அடுக்குவர். முதல்படியில் புல், செடி, கொடிகளும், இரண்டாம் படியில் சங்கு, சிப்பி பொம்மைகளும், மூன்றாம் படியில் ஈ, எறும்பு முதலிய உயிர்களும், நான்காம் படியில் வண்டு, நண்டு போன்றவையும், ஐந்தாம் படியில் பறவை, மிருகங்களும், ஆறாம் படியில் மனிதர்களும், ஏழாம் படியில் முனிவர், மகான் போன்றோரும், எட்டாம் படியில் இந்திராதி தேவர்கள், நவக்கிரகங்களும், ஒன்பதாம் படியில் தெய்வச் சிலைகளும் இடம் பெறும். இத்துடன் தெப்பக்குளம், கோயில், தோட்டம், சந்தை, திருமண வைபவம், கடைத்தெரு போன்றவையும் வைப்பதுண்டு.கொலு தத்துவம்: கொலு படிகளைப் போல மனிதனும் வாழ்வில் பல படிநிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு நாம் உயர வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஓரறிவு உயிராக இருந்த நாம் இந்த பிறவியில் ஆறறிவுள்ள மனிதர்களாக இருக்கிறோம். அன்பு வழியில் எல்லா உயிர்களையும் நேசித்து வாழ்ந்தால் அம்பிகை அருளால் தெய்வ நிலைக்கு முன்னேறலாம் என்பதே கொலு தத்துவம். அடிப்படைத் தேவைகளான கல்வி, செல்வம், வீரத்திற்கும் குறைவிருக்காது.