ராதா - பொருள் என்ன?
ராதா... நம்மை உய்விக்க வந்த ஒரு சொல். அவள் உ.பி.மாநிலம் மதுரா அருகிலுள்ள பர்சானா என்ற ஊரில் பிறந்தவள். மகாலட்சுமியின் அம்சமான இவளே, துர்க்கையாகவும், பார்வதியாகவும் விளங்குகிறாள். உலகமே அவளால் தான் இயங்குகிறது. அவள் தன் பெயரை 'ராதா' என வைத்துக் கொண்டது கூட நம்மை உய்விக்கத் தான். இந்த சொல்லுக்கு 'வெற்றி' அல்லது 'செழிப்பு' என்று பொருள். 'ராதே கிருஷ்ணா' என்று சொல்லி விட்டு, ஒரு செயலைத் தொடங்கினால் அது வெற்றியை மட்டுமல்ல, செழிப்பையும் தரும். இந்தச் சொல்லை ஆங்கிலத்தில் 'RADHA' என வட்டமாக எழுதுங்கள். அதை 'ஏ'யில் இருந்து படித்தால் 'ARADH' என்று வரும். இதற்கு 'பூஜிப்பது' என்று பொருள். கண்ணனை உண்மையான பக்தியுடன் பூஜித்தால் உங்கள் துன்பங்கள் பறந்தோடும் என்கிறாள் ராதா. இதையே மாற்றி 'ADHAR' என எழுதினால் 'ஆதாரம் அல்லது அடித்தளம்' என்று பொருள்படும். கிருஷ்ணனே இந்த உலகின் ஆதாரமாக உள்ளார். அவரைப் பற்றிக்கொண்டால் பிறப்பற்ற நிலை அமையும் என்கிறாள். அதையே 'DHARA' என வாசித்தால் 'வழிந்தோடுதல்' என அர்த்தமாகிறது. ஒரு பாத்திரத்தில் உள்ள நீரை இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றும் போது, எப்படி வழிகிறதோ அதுபோல உங்கள் மனதிலுள்ள பக்தி என்னும் நீரை அவன் திருவடியில் ஊற்ற வேண்டும் என்கிறாள்.