உள்ளூர் செய்திகள்

அழகின்றி பிறக்க காரணம் என்ன? - விளக்குகிறார் காஞ்சிப்பெரியவர்

நமக்கெல்லாம் பல பிறவிகள் உண்டு. போன பிறவியில் நம்மை விட நல்லது செய்த பசங்களுக்கு, இந்தப் பிறவியில் பகவான் நம்மைவிட சவுகர்யங்கள் தந்திருக்கிறார். அவர்களைக் கண்டு பொறாமைப்படக்கூடாது. இதேபோல், நம்மளவு சவுகர்யமோ, அழகோ இல்லாதவர்களைப் பார்த்து நாம் தாழ்த்தியாக நினைத்துக் கர்வப்படவும் கூடாது. கர்வம் என்பது கொடிய வியாதி. போன பிறவியில் நம்மை விடத் தப்பு செய்ததால் அவர்கள் இப்போது பணத்தில், புத்தியில், அழகில் கீழாக இருக்கலாம். ஆனால், நமக்கு கர்வம் வந்தால், இதுவே அவர்கள் செய்த தப்புக்களை எல்லாம் விடப் பெரிய தப்பு. இதனால், நாம் அடுத்த பிறவியில் இப்போது அவர்கள் இருப்பதை விடக் கீழான நிலையில் பிறப்போம். இன்னும் பலவிதமான அழுக்குகள் இருக்கின்றன. பிறர் இல்லாதபோது, அவர்களைப் பற்றி கேலியாகவோ, நிந்தையாகவோ பேசுவதில் உங்களுக்கு எண்ணம் போகவே கூடாது. இப்படிப் பேசுவதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறதே என்பதற்காக இதில் ஈடுபடக்கூடாது. ஒருவனிடம் தப்புத் தெரிந்தால், அதை நேரில் நல்லபடியாக நயமாக அவனிடம் சொல்ல வேண்டுமே ஒழிய, அந்தத் தப்பை மற்றவர்களிடம் சொல்லி சந்தோஷப்படுவது வெறும் கோழைத்தனம். இப்படிப் புறங்கூறும் போது அங்கே அவன் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எங்கேயும் உள்ள சுவாமி அங்கேயும் இருக்கிறார். என்றைக்கோ ஒருநாள் அவர் தண்டித்து விடுவார். அதற்கு யாரும் தப்ப முடியாது.