உள்ளூர் செய்திகள்

பயம் அறவே வேண்டாம்

* சாதாரணமாக ஒரு தப்புச் செய்கிற போது, ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத்துகிறது. உடனே, இந்த அழுக்கை யாரும் தெரிந்து கொண்டு விடக்கூடாது என்று அதை மூடி மறைக்கத் தோன்றுகிறது. நியாயமாக, தவறுதல் உண்டானவுடன் பிரார்த்தனை பண்ணினால் அந்தப் பிரார்த்தனையே சோப்பைப் போல அந்தத் தப்பை அகற்றிவிடும்.* தப்பை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் மூடவேண்டும் என்கிறபோது, பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. அழுக்கைத் தேய்த்துக் கழுவாமல் மூடி மூடி வைத்தால் சீழ் பிடித்துச் சிரங்காகி விடும். அது மாதிரி, தப்பை மூடியவுடன் அது பொய் என்னும் சிரங்காக ஆகிவிடுகிறது. * பெரியவர்களிடம் எல்லாம் உங்களுக்கு நிறைந்த மரியாதையும், மதிப்பும் இருக்கத் தான் வேண்டும். ஆனால், அர்த்தமில்லாத பயம் கூடாது. பயம் உள்ளத்தூய்மையைக் கெடுக்கிற அழுக்கு. தப்பு செய்தால் கூட, அவர்களிடம் உள்ளதைச் சொல்ல வேண்டுமே ஒழிய, பொய்யால் மூடி மறைக்கக் கூடாது.-காஞ்சிப்பெரியவர்