உள்ளூர் செய்திகள்

பலன் தராத தர்மம்

தர்மம் செய்வது நன்மையைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஹராமான (தடை செய்யப்பட்ட) வழியில் வரும் பணத்தினால் தர்மம் செய்வது எவ்வித பயனையும் தராது என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அவர்கள் சொல்வதைக் கேட்போம்.* ஒரு மனிதன் புனித ஹஜ் யாத்திரை செல்கிறான். இருகை ஏந்தி அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி பிரார்த்தனை செய்கிறான். ஆனால், அவன் தடைவிதிக்கப்பட்ட ஆடையை அணிந்திருக்கிறான். தடை செய்யப்பட்ட உணவு வகையை சாப்பிடுகிறான். தடை செய்யப்பட்ட பானத்தை குடிக்கிறான். தடை செய்யப்பட்ட அநியாய வழிகளில் வந்த பணத்தில் வளர்ந்திருக்கிறான். இவனுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால் எப்படி ஏற்கப்படும்?* ஒருவர் தடைசெய்யப்பட்ட வழியில் பொருளைத் தேடி அதைக் கொண்டு தர்மம் செய்தால் அதில் அவருக்கு எந்த நற்கூலியும் இல்லை. அந்த பாவச்சுமையை அவரே தாங்கிக் கொள்கிறார்.* இப்படியெல்லாம் சொல்லும் அண்ணலார், இன்னும் ஒரு படி மேலாக, ''தடை செய்யப்பட்ட ஒரு உருண்டை உணவு, ஒருவனது வயிற்றை அடையுமானால், அவனுடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை,'' என்கிறார்கள்.