எந்த ரகம்
பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் ஒருவர். உலகில் மூன்று விதமான மனிதர்கள் உள்ளனர்.1. மற்றவருக்கு உதவுபவர் 2. மற்றவர்களுக்கு துன்பம் கொடுப்பவர், 3. பிறர் பொருளை அபகரித்து வாழ்பவர். இதில் நீங்கள் எந்த ரகம் என யோசித்து பாருங்கள்' எனக் கேட்டார். வகுப்பில் இருந்த மாணவர் ஒருவன், ''நீங்கள் சொல்வது புரியவில்லை. விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான். அவனிடம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். அதை மூன்று கிண்ணங்களில் ஊற்றி முதல் கிண்ணத்தில் சிறிது சர்க்கரையை சேர்த்தார். அந்த நீரை குடிக்கச் சொன்னார். அவனது முகம் பிரகாசமாகியது. இந்த மனிதர்கள் பிறருக்கு உதவி செய்பவர்கள். அதாவது சர்க்கரை போல இனிப்பானவர்கள். இரண்டாவது கிண்ணத்தில் சிறிது களிமண்ணை சேர்த்தார். அது கரைந்ததும் தண்ணீர் கலங்கல் ஆகி விட்டது. இந்த களிமண் குணம் கொண்டவர்களே இரண்டாம் வகையினர். அதாவது பிறரைக் கெடுத்து துன்பம் கொடுப்பவர்கள். மூன்றாவது கிண்ணத்தில் சிறிது பஞ்சினை இட்டார். அது தண்ணீரை உறிஞ்சத் தொடங்கியது. இவர்கள் பிறர் பொருளை அபகரித்து வாழும் சுயநலவாதிகள்.