பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்!
ஒவ்வொருவரும் தங்கள் கடமையில் கவனமாக இருக்க வேண்டும். தரப்பட்டுள்ள பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் செய்ய வேண்டுமென நபிகள் நாயகம் கூறுகிறார்.ஒரு குடும்பத்தில் மனைவியையும், பெற்றோரையும் திருப்திப்படுத்தும் பொறுப்பை ஆண் ஏற்க வேண்டும். பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து உபகாரம் செய்பவர் அதே போல, தன் மனைவிக்கும் உபகாரம் செய்ய வேண்டும்.''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஒரு தலைவர் நாட்டின் பொறுப்பாளர். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் தனது குடும்பத்தின் பொறுப்பாளர். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான்.பெண் தனது கணவரின் நலனுக்கு பொறுப்பாளர். அவள் அந்த பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாளன் தனது எஜமானனின் செல்வத்திற்கு பொறுப்பாளன். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்,” என நாயகம் வலியுறுத்துகிறார்.