உள்ளூர் செய்திகள்

இதோ! ஒரு வேலைக்காரர்

அம்மிக்கு பதிலாக மிக்சி, உரலுக்கு பதிலாக கிரைண்டர், சட்டிக்கு பதிலாக குக்கர் என எல்லாம் வந்தது. வேலையும் எளிதானது போல் தோன்றியது. இப்போ என்னாச்சு... கிரைண்டர் குழவி என்னமாய் கனக்குது? மிக்சி அடிக்கடி பழுதாகுது” என்று சலிப்பு வருகிறது. விளைவு, கல்லைத் துாக்க ஒருவரை தேட வேண்டியிருக்கிறது. மெக்கானிக் ஷாப்பில் காத்து கிடக்க வேண்டியிருக்கிறது. நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமாவுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. அவர் அடிக்கடி மாவு திரித்து, கைகள் புண்ணாகி விட்டன. தோல்துருத்தியில் தண்ணீர் எடுத்து, உடலின் குறுக்காக போட்டபடி வந்ததால் அதன் கயிறு அழுத்தியதில், காயம் ஏற்பட்டிருந்தது. எந்நேரமும் வேலை என்பதால் உடைகள் அழுக்காகி இருந்தன. இதை அவரது கணவர், அலி (ரலி) கவனித்தார்.“உங்கள் வீட்டிற்கு போய் ஒரு அடிமையை உதவிக்கு அழைத்து வந்து வேலைக்கு வைத்து கொள்ளலாம் இல்லையா?” என்றார்.பாத்திமாவும் வீட்டுக்கு சென்றார். அப்போது, நாயகம் சிலருடன் பேசி கொண்டிருந்தார். அந்நிலையில், அவரிடம் கேட்க கூச்சப்பட்டு வீடு திரும்பி விட்டார். மறுநாள், தந்தையே மகளைத் தேடி வந்தார். மகள் வந்த காரணத்தை விசாரித்து அறிந்தார்.மகளிடம், “நீர் இறைவனுக்கு பயந்து நடக்க வேண்டும். அவனுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதோடு, வீட்டு வேலைகளையும் செய்து வர வேண்டும்.மேலும், நீர் இரவு படுக்கைக்கு செல்லும் முன், 'ஸுப்ஹானல்லா' என 33 தடவையும், 'அல்ஹம்து லில்லாஹ்' என 33 தடவையும், 'அல்லாஹு அக்பர்' என 34 தடவையும் ஓதி, உடம்பில் ஊதிக்கொண்டால், ஒரு வேலைக்காரரை விட இது பயனளிக்கும்,” என்றார்.இதை பாத்திமா ஏற்றுக் கொண்டு, அதன்படியே நடந்தார்.