மேலும் செய்திகள்
நிதிஷ் குமாரை இழுக்க முயற்சியா
10-Mar-2025
'மகன்களின் அரசியல் எடுபடவில்லை என கருதி, இவரே களத்தில் இறங்க முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது...' என, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான ரப்ரி தேவி பற்றி கிண்டல் அடிக்கின்றனர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. லாலுவின் மனைவி தான் ரப்ரி தேவி. ஏற்கனவே லாலு, பீஹார் முதல்வராக இருந்தபோது, ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றார். அப்போது, தன் மனைவியை முதல்வராக்கி விட்டு சென்றார்.தற்போது தனக்கும், தன் மனைவிக்கும் வயதாகி விட்டதால், தன் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரை அரசியலுக்குள் இறக்கி விட்டுள்ளார். ஆனால், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணியின் அதிரடி அரசியலுக்கு முன், அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அடுத்த சில மாதங்களில் பீஹாரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து, இம்முறை கோட்டை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்துடன், ரப்ரி தேவி அதிரடியாக மீண்டும் களம் இறங்கியுள்ளார்.சமீபத்தில் சட்ட மேல்சபையில், நிதிஷ் குமாரை கடுமையாக சாடிய அவர், 'இந்த முறை வெற்றி எங்களுக்குத் தான்...' என, சவால் விட்டுள்ளார்.பீஹாரில் உள்ள சக அரசியல்வாதிகளோ, 'காலம் எவ்வளவோ மாறிவிட்டது. ரப்ரி தேவியின் பழைய அரசியல் இப்போது எடுபடுமா என்பது சந்தேகம் தான்...' என்கின்றனர்.
10-Mar-2025