உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  அரசியல்வாதிகளுக்கு பாடம்!

 அரசியல்வாதிகளுக்கு பாடம்!

'திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜிக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது...' என, கிண்டலாக பேசுகின்றனர், மேற்கு வங்க மாநில மக்கள். மேற்கு வங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ஏப்ரல் வரை, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., பொதுச்செயலர் அபிஷேக் பானர்ஜி, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் விதமாக, பிரசாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேர்தலுக்கு பின், பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கில் அபிஷேக் பானர்ஜியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டன. ஆனால், அவரை கைது செய்ய தற்காலிக தடை விதித்த கொல்கட்டா உயர் நீதிமன்றம், அவர் வெளிநாடு செல்லவும் தடை விதித்தது. இந்நிலையில், சமீபத்தில் நீதிமன்றத்தை அணுகிய அபிஷேக் பானர்ஜி, 'கண் தொடர்பான பிரச்னைக்காக, அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை எடுக்க அனுமதிக்க வேண்டும்...' என, மனு தாக்கல் செய்தார். விசாரித்த உயர் நீதிமன்றம், 'கொல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறலாமே...' என, கருத்து தெரிவித்தது. இதை பார்த்த மேற்கு வங்க மக்கள், 'கொல்கட்டா உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம்...' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை