கட்சியை கலைக்க முடிவு?
'என்ன இது, தேர்தல் வியூக நிபுணருக்கு வந்த சோதனை...' என, பீஹாரைச் சேர்ந்த, ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோரை பார்த்து கிண்டல் அடிக்கின்றனர், பிற கட்சியினர். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரசாந்த் கிஷோர், ஏற்கனவே, பா.ஜ., காங்கிரஸ் மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு, தேர்தல் வியூக நிபுணராக பணியாற்றியவர். இவர், எந்த கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தாரோ, அந்த கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தன. இதனால், இவரது புகழ் உச்சத்துக்கு சென்றது. எதிர்பாராத விதமாக, ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கி, கடந்தாண்டு நவம்பரில் பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார், பிரசாந்த் கிஷோர். இவரது கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து, பீஹார் சட்டசபை தேர்தலில் முறைகேடு செய்து, பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றதாகவும், மறு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஒரு தொகுதியில் கூட உங்களால் வெற்றி பெற முடியவில்லை... தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்தவுடன், நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்கள்...' என, பிரசாந்த் கிஷோரை கடுமையாக கண்டித்தது. இதனால், அரண்டு போன பிரசாந்த் கிஷோர், கட்சியை கலைத்து விடலாமா என தீவிர யோசனையில் உள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.