உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  ஆரம்பத்திலேயே அணுகுண்டா?

 ஆரம்பத்திலேயே அணுகுண்டா?

'இவர்கள் சொல்வதை நம்புவதா, வேண்டாமா; ஒரே குழப்பமாக இருக்கிறதே...' என புலம்புகிறார்,பீஹார் மாநில சுகாதாரத்துறை அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவருமான நிஷாந்த் குமார். பீஹாரில், முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சாம்ராட் சவுத்ரிக்கு முன், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார். கடந்த ஏப்ரலில், ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்றதால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது மகன் நிஷாந்த் குமார், பீஹார் மாநில அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு, பீஹார் தலைநகர் பாட்னாவில், 'தேஷ்ரத்னா மார்க்' என்ற பெயரிலான பங்களா ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கு முன், அந்த பங்களாவில் சுஷில் குமார் மோடி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் குடி யிருந்தனர். ஆனால், அவர்கள் இருவருமே இரண்டு ஆண்டுகள் மட்டுமே அமைச்சரவையில் நீடித்தனர். இதை நிஷாந்த் குமாரிடம் சுட்டிக்காட்டிய சிலர்,'கவனமாக இருங்கள்; இந்த பங்களா ராசியில்லை; வேறு பங்களாவை கேட்டு வாங்கி, அங்கு குடி பெயர்ந்து விடுங்கள்...' என கூறியுள்ளனர். இதனால் கலக்கம் அடைந்துள்ள நிஷாந்த் குமார், 'பீஹார் அரசியலில் அப்பாவின் இடத்தை பிடித்து விடலாம் என நினைத்தால், ஆரம்பத்திலேயே அணுகுண்டை துாக்கி போடுகின்றனரே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !