யோசிக்க வேண்டாமா?
'பழைய பஞ்சாயத்தே இன்னும் முடிவுக்கு வரவில்லை... இதில், புது பஞ்சாயத்து வேறா...' என, கவலைப்படுகின்றனர், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள். முன்னாள் பிரதமரும், காங்., - எம்.பி., ராகுலின் பாட்டியுமான இந்திரா, கடந்த 1984ல், டில்லியில், அவரது சீக்கிய பாதுகாவலர் களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, டில்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் கலவரம் வெடித்தது. காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வன்முறையில், நுாற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்; அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இது தொடர்பான பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த மோசமான சம்பவத்துக்கு பின், காங்கிரஸ் கட்சி மீது சீக்கியர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இது தொடர்பாக, காங்கிரஸ் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், காங்கிரஸ் கட்சியில் இருந்து, பா.ஜ.,வுக்கு தாவியவரும், சீக்கியரும், மத்திய அமைச்சருமான ரவ்நீத் பிட்டுவை, சமீபத்தில் பார்லிமென்ட் வளாகத்தில், 'துரோகி' என, பலரது முன்னிலையில் ராகுல் அழைத்தார். இதற்காகவே காத்திருந்த பா.ஜ.,வினர், 'சீக்கியர்கள் மீது ராகுலுக்கு உள்ள வெறுப்பு இன்னும் அடங்கவில்லை. அந்த வெறுப்பு தான், இப்போது வார்த்தையாக வெடித்துள்ளது...' என, பேட்டி கொடுத்தனர். 'வார்த்தையை விடும்போது மிகவும் யோசிக்க வேண்டாமா...?' என, ராகுலை நினைத்து புலம்புகின்றனர், காங்., கட்சியினர்.