மின் கம்பிகளை உரசிய மரக்கிளைகள் அகற்றம்
வண்டலூர்:நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, வண்டலூரில், உயர் அழுத்த மின் கம்பிகளை உரசிய மரக்கிளைகள் அகற்றப்பட்டு, விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டது.வண்டலூர், ரயில் இருப்பு பாதையை ஒட்டி, பெருங்களத்தூர் மார்க்கமாக, மூகாம்பிகை அம்மன் கோவில் பிரதான தெரு சாலை செல்கிறது.இதில், ராஜரத்னம் தெரு சந்திப்பு அருகே, மின்மாற்றி எதிரே, ஒரு மின் கம்பத்திலிருந்து மற்றோர் மின் கம்பத்திற்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் மீது, மரத்தின் கிளைகள் படர்ந்து இருந்தன.இதனால், மின் வினியோகம் தடைபடவும், மரக் கிளைகளில் மின்சாரம் பாய்ந்து, விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக, நமது நாளிதழ் புகார் பெட்டி பகுதியில், நேற்று முன்தினம், செய்தி வெளியானது.செய்தி எதிரொலியாக, மின்கம்பிகள் மீது உரசிய மரக்கிளைகளை மின்வாரிய ஊழியர்கள் அகற்றி, தாழ்வான உயரத்தில் சென்ற மின் கம்பிகளை சரியான உயரத்தில் இணைத்து பொருத்தினர்.இதனால், மின் வினியோக சிக்கல் மற்றும் விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டது. பகுதிவாசிகள் நிம்மதி அடைந்தனர்.