பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் கிடைத்தது; தினமலர் செய்தி எதிரொலி
வால்பாறை; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்கபட்டதால் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாவட்டம், வால்பாறை, நீலகிரி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. இந்த மாதங்களில் கடுங்குளிர் நிலவும் என்பதால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசின் சார்பில் ஆண்டு தோறும், ஸ்வெட்டர் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஸ்வெட்டர் வழங்கப்படாமல் இருந்தது. இது குறித்து, நேற்றைய 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து பொள்ளாச்சி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாரதி, வட்டாரக்கல்வி அலுவலர்(பொ) சின்னப்பராஜ் ஆகியோர் வால்பாறையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஸ்வெட்டர்களை வழங்கினர். இதனால், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கல்வி அதிகாரிகள் கூறு கையில், 'வால்பாறையில், துவக்கப்பள்ளி முதல் நடுநிலைப்பள்ளி வரை, 1,300 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு வழங்க வேண்டிய மழைக்கால ஸ்வெட்டர் வழங்கப்படுகிறது. 'எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக ஸ்வெட்டர் வழங்கப்பட்டது,' என்றனர்.