தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி: சென்னையில் மக்கள் பிரச்னைகளுக்காக போராடிய, தமிழக காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை அணி நிர்வாகி அப்ரோஸ், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பாவி ஒருவர் மீது கொஞ்சமும் நியாயமின்றி, 'குண்டாஸ்' போட்டிருப்பது ஏற்க முடியா தது. சீருடையில் இருக்கும்போது, சர்வாதிகாரிகளாக நடந்து கொள்வது போலீசாரின் வாடிக்கையாக இருக்கிறது. உங்களுடைய துப்பாக்கிகள், கைத்தடிகளை, அப்பாவிகளுக்கு எதிராக தொடர்ந்து பயன்படுத்த முயற்சித்தால், அதை தகர்த்து எறிவதை தவிர வேறு வழியில்லை. டவுட் தனபாலு: தி.மு.க.,வின் கூட்டணி கட்சியாக இருந்தும், முதல்வர் ஸ்டாலின் வசம் இருக்கும் போலீஸ் துறைக்கு எதிராக பொங்கி எழுந்திருக்காரே... இவரது ஆவேசத்தை பார்த்தால், தமிழகமே கிடுகிடுக்கிற அளவுக்கு மாபெரும் போராட்டத்தை நடத்திடுவாரோ என்ற, 'டவுட்' வருதே! அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அ.தி.மு.க., என்ற ஒரு கட்சி இருப்பதால் தான், தமிழகத்தில் அதிகம் பேர் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா காலத்தில், மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' போட்டது அ.தி.மு.க., ஆட்சியில் தான். தி.மு.க.,வில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தை போன்ற வாரிசு அரசியல் அ.தி.மு.க.,வில் இல்லை. 2026-ல் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்ற பின், தமிழகத்தில் ஏழை என்ற சொல்லே இருக்காது. டவுட் தனபாலு: ஆட்சிக்கு வரணும் என்பதற்காக, வாய்க்கு வந்த வாக்குறுதிகளை எல்லாம் வாரியிறைக்க கூடாது... 2011 முதல் 2021 வரை நடந்த அ.தி.மு.க., ஆட்சியில், எத்தனை ஏழைகளை பணக்காரர்கள் ஆக்குனீங்க என்பதை, 'டவுட்' இல்லாம சொல்ல முடியுமா? தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை: பீஹாரைச் சேர்ந்த வாக்காளர்கள், 6.50 லட்சம் பேர், தமிழகத்தில் ஓட்டளிக்க போவதாக பொய்யான செய்தியை, மத்திய நிதி அமைச்சராக இருந்த, காங்., கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் கூறியுள்ளார். வேறு நாட்டில் இருந்து வந்தவர்கள் இந்த நாட்டில் ஓட்டளிக்கலாம்; வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஓட்டளிக்க கூடாதா. டவுட் தனபாலு: வெளி மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வரும் தொழிலாளிகள், ஒரு நாள் ஓட்டு போடுவதற்காக, பல ஆயிரம் ரூபாயை செலவு பண்ணி, அவங்க மாநிலங்களுக்கு போக முடியுமா... அதனால, இருக்கும் இடத்திலேயே அவங்களுக்கு ஓட்டளிக்கும் வசதியை செய்து தருவது நல்ல விஷயம் தானே... மூத்த தலைவரான சிதம்பரத்துக்கு இது தெரியாதா என்ற, 'டவுட்'தான் வருது!