மேலும் செய்திகள்
இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
16-Apr-2025
ஓசூர் : ஓசூர் அருகே 10 ஆண்டுகளில், 46,000 மரக்கன்றுகளை பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தன்னார்வலர் ஒருவர் இலவசமாக வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாருதி கிரீன் பீல்டு லே அவுட்டில் வசிப்பவர் லட்சுமணன், 59. இவர், 2008ல் ஓசூர் ஹட்கோ போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள கசவுகட்டா செல்லும் சாலையோரம் துவங்கி, அவர் வசிக்கும் லே அவுட் வரை, 1,800 மரக்கன்றுகளை நட்டார். 2016 முதல், தன் வீட்டிலேயே நர்சரி அமைத்து, இலவசமாக மரக்கன்று வழங்குகிறார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: கடந்த 2016 முதல் தற்போது வரை, 46,000 மரக்கன்றுகள், பூஞ்செடிகளை இலவசமாக வழங்கியுள்ளேன். மரம் வளர்க்க விரும்புவோர், மரங்களை நட எந்த இடத்தில் குழி தோண்டி உள்ளனரோ, அதை படம் எடுத்து காட்டினால், இலவச மரக்கன்றுகளை வழங்கி விடுவேன். என் வீட்டில் நர்சரி கார்டன் பராமரித்து, என்.எஸ்.எஸ்., மாணவ --- மாணவியரின் உதவியோடு, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் உரம், மண் மற்றும் விதைகளை போட்டு தயார் செய்கிறேன். அவை வளர்ந்த பின், மரம் நட ஆர்வமுள்ள மக்களுக்கும், முன்னணி தனியார் நிறுவனங்களுக்கும் இலவசமாக வழங்குகிறேன். தற்போது, நண்பர்கள், தனியார் மருத்துவமனைகள் உதவியுடன், ஆந்திராவிலிருந்து ஒரு அரசமரம், 500 ரூபாய் என்ற விலையில் வாங்கி வந்துள்ளோம். அவற்றை கிராமங்களில் நட திட்டமிட்டுள்ளோம். மேலும், நாவல், பாதாம், இலுப்பை, புங்கன், வேம்பு, பலா, பூவரசன் உள்ளிட்ட பல வகை மரக்கன்றுகளை வழங்கி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
16-Apr-2025