மேலும் செய்திகள்
இது 'சர்க்கார்' படம் அல்ல!
15-Jul-2025
ஆர்.கோவிந்தன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியா -- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், 'இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவில், 25 சதவீத வரி விதிக்கப்படும்' என அறிவித்துள்ளார், அமெரிக்க அதிபர் டிரம்ப். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கும் நம் நாட்டிற்கு அபராதம் விதித்துள்ளார். 'வெள்ளை மாளிகை கோமாளி' என்று, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி அடித்துள்ள கிண்டலை, டிரம்பின் செயல்கள் உறுதிப்படுத்துகின்றன. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நகைப்பிற்குரியதாகவே உள்ளன. டிரம்ப் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்... பாகிஸ்தான் படையெடுத்து வந்தால், ஐ.நா., சபைக்கு ஓடும் காங்கிரஸ் ஆட்சி அல்ல இது; தேசப்பற்று மிக்க மோடியின் ஆட்சி! மோடி எப்படிப்பட்டவர் என்பதை, 'ஆப்பரேஷன் சிந்துார்' உலகிற்கே உணர்த்தி இருக்கும். ஆயுத வியாபாரத்தை மட்டுமே நம்பி இருக்கும் அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுத கொள்முதல் செய்வதை தாங்க முடியவில்லை. அதனால்தான் இந்த வரி விதிப்பு! தானே உலகின் வலிமையான சக்தி; தான் சொல்வதை தான் உலக நாடுகள் கேட்க வேண்டும் என்ற ஆணவத்தில் ஆடுகிறார் டிரம்ப். நம் நாட்டிற்கு அபராதம் விதிக்க, இவர் யார்? இந்திய இறக்குமதி பொருட்களுக்கு, 25 சதவீத வரியும், ரஷ்யாவிடம் ஆயுத கொள்முதல் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அபராதமும் விதித்த டிரம்ப்க்கு, தக்க பாடம் கற்பிக்கும் வகையில், அமெரிக்காவிடமிருந்து, 'எப்-35' ரக போர் விமானங்களை வாங்க இருந்த நிலையில், தற்போது, அந்த விமானங்களை வாங்க முடியாது என அமெரிக்காவிடம், இந்தியா நேரடியாக தெரிவித்துள்ளதாம்! எவரிடம் வந்து பம்மாத்து காட்டுவது? தேர்தல் நேரத்து பாசம்! எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், இப்போது தான் ஆட்சியாளர்கள் கண்களுக்கு மக்கள் தெரிகின்றனர். 'உங்களுடன் ஸ்டாலின், உங்கள் வீடு தேடி வரும் அரசு, ஓரணியில் தமிழ்நாடு' என்ற கோஷத்துடன் வீடு வீடாக சென்று விளம்பரம் செய்கின்றனர். இவர்கள் தான் இப்படி என்றால், எதிர்க்கட்சி தலைவரான அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் அதே பாணியை கையில் எடுத்துள்ளார். 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்று சொல்லி ஊர் ஊராக சுற்றி வருவதோடு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தாலிக்கு தங்கம் கொடுப்பதோடு, பட்டுப்புடவையும் சேர்த்துக் கொடுப்பதாக கூறுகிறார். கூடவே, மகளிர் உரிமை தொகையாக, 2,500 ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் இதேபோன்று தான் வாக்குறுதிகளை அள்ளி வீசியது தி.மு.க., ஆனால், ஆட்சியில் அமர்ந்த பின், கல்லா கட்டுவதில் குறியாக இருக்கின்றனரே தவிர, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதேபோன்று, எதிர்க்கட்சியான அ.தி.மு.க., இந்த நான்கரை ஆண்டுகளாக பொதுமக்களின் பிரச்னைகளுக்கு அரசை எதிர்த்து குரல் கொடுக்கவும் இல்லை; பெரிதாக போராடவும் இல்லை. இப்போது வாக்குறுதிகளை அள்ளி வீசியபடி வலம் வருகின்றனர். பிரதான கட்சிகள் தான் இப்படி தேர்தல், 'டிரெண்ட்' செய்கின்றனர் என்றால், இவர்களைப் போல் பலர், இதே பாணியில் வரிசை கட்டி நிற்கின்றனர். பா.ம.க.,வின் அன்புமணி, 'மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் ஊர் சுற்றுகிறார். தே.மு.தி.க., பிரேமலதா, அவர் பங்கிற்கு, 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' என்ற பெயருடன் சுற்றுப்பயணம் செல்ல துவங்கிவிட்டார். இப்போது புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய் கூட, மாநாடு என்ற பெயரில் மக்களை சந்திக்க உள்ளார். ஆக, தேர்தல் வந்தால் மட்டும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது பாசம் பொங்குகிறது. அதுசரி... தேர்தலில் வெற்றி பெற வேண்டுமே! மக்களை சந்திக்க கிளம்பும் இவர்கள், கூடவே இலவசங்கள் தருவதாக வாக்குறுதிகளையும் வழங்கு கின்றனர். மக்கள் மனதை மாற்ற என்ன யுக்திகளை எல்லாம் கையாள வேண்டுமோ அனைத்தையும் கன கச்சிதமாக செய்து வருகின்றனர். அரசியல்வாதிகளை புரிந்து கொண்டு மக்கள் இலவசங்களை புறந்தள்ளி சரியான நபர்களுக்கு ஓட்டளித்தால் மட்டுமே, உண்மையான ஜனநாயகம் மலரும்! விழாவை புறக்கணித்தது ஏன்? கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கங்கைகொண்ட சோழ புரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவை, தி.மு.க., முற்றிலும் புறக்கணித்தது என்றே சொல்லலாம். ஏன் இந்த முடிவு? ராஜராஜ சோழனின் விழாவில் பங்கேற்றால் ஆட்சியை இழந்துவிடு வோம் என்ற மூடநம்பிக்கையா அல்லது தமிழ் பாரம்பரியம், தமிழர்களின் வரலாறு, தமிழ் இலக்கியங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு தெரிந்த அளவு முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாதே என்ற பயமா? விழாவில் ஒரு மணி நேரம் பேசிய பிரதமர் மோடி, 'ராஜராஜ சோழனும் , அவரது மகன் ராஜேந்திர சோழனும் பாரதத்தின் அடையாளங்கள்' என்றவர் , சோழ மன்னர்களின் போர்த்திறனையும், ராஜேந்திர சோழனின் கடற்படை வலிமை மற்றும் அவர் காலத்தில் குடவோலை முறையில் நடந்த தேர்தல் குறித்தும் விரிவாக பேசினார். சோழ மன்னர்களின் சிவ பக்தியை விளக்கிய பிரதமர், 'போர் மேகங்கள் சூழ்ந்த இன்றைய உலகிற்கு, சைவ சித்தாந்தத்தின், 'அன்பே சிவம்' எனும் மந்திரம் பெரிதும் கை கொடுக்கும்' என்றார். தமிழ் பாரம்பரியம் மற்றும் இலக்கியங்கள் மீது அவருக்கு இருக்கும் புரிதல், ஆர்வம் மற்றும் அக்கறை நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆனால், கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்ட விழாவில் பெருமையுடன் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, ராஜராஜ சோழன் விழாவுக்கு துணை முதல்வரை அனுப்ப கூட முடியவில்லையே ஏன்? ராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டினார், தமிழோடு, சமஸ்கிருதத் தையும் ஆதரித்தார் என்பது தான் தி.மு.க.,வின் வெறுப்புக்கு காரணமா? தமிழ், தமிழர் பண்பாடு, தமிழர் வளர்த்த கலைகள் என்று தி.மு.க., தலைவர்கள் பேசுவதெல்லாம், அரசியலுக்கும், ஆட்சியைப் பிடிக்கவும் தான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது!
15-Jul-2025