இப்படியும் விரயம் ஆகட்டுமே!
ஆர்.வேணுகோபாலன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தெரு நாய்களை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஒன்றும் வேலைக்காகவில்லை. மனித உரிமை ஆர்வலர்களோ, இதுவரை மனித உரிமைக் காகத் தான் குரல் கொடுத்து கொண்டிருந்தனர். தற்போது நாய்களுக்காக களத்தில் குதித்துள்ளனர். அத்துடன், இருக்கவே இருக்கிறது, 'பீட்டா' அமைப்பு. இவர்கள் அனைவரையும் மீறி, தெரு நாய்க்கடியில் இருந்து மக்களை காப்பாற்றுவது கடினம். ஆனால், கர்நாடக மாநிலம் தாவணகெரே நகர மக்கள், இதற்கு ஓர் அருமையான உபாயத்தை கையாண்டு வருகின்றனராம். நீல நிறம் என்றால் நாய்களுக்கு அலர்ஜியாம்! அ தனால், தாவணகெரே நகரில் உள்ள கே.டி.ஜே., நகரில், தெரு நாய் தொல்லையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள, வீட்டு முன்புறம் பாட்டில்களில் நீர் நிரப்பி, அதில், சிறிது நீல நிறப் பொடியை கலந்து வைத்து விடுவராம் . அதன்பின், அப்பகுதியில் தெரு நாய்களின் தொல்லை கட்டுப்படுத்த பட்டுள்ளதாம். அதேபோன்று தமிழகத்திலும் செய்யலாம். முதல்வரின் மனைவி நடத்தும் குடிநீர் நிறுவனத்திலிருந்து பாட்டில்களில் தண்ணீர் வாங்கி, அதில் பெருநகர் மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் ஒன்றியங்களின் வாயிலாக நீல நிறப் பொடியை தண்ணீரில் கலந்து, ஒவ்வொரு வீட்டு வாசல்களின் முன்பும் வைத்து விடலாம். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை அந்த தண்ணீரை கொட்டி விட்டு, புதிய பாட்டில்களை வைக்கலாம். இதனால், தெரு நாய்களின் தாக்குதலில் இருந்து மக்கள் தப்பிப்பதுடன், முதல்வரின் மனைவி நடத்தும் குடிநீர் நிறுவனத்தில் வியாபாரம் சூடு பிடிக்கும். கூடவே, உடன்பிறப்புகளும் கணிசமான தொகையை கமிஷன் வாயிலாக கைப்பற்றி, கரப்சன் மூலம் சேகரித்து, கலெக்சனில் பங்கும் பிரித்து கொள்ளலாம். மக்களின் வரிப்பணம் எப்படி எப்படியோ விரயமாகிறது; இப்படியும் கொஞ்சம் ஆகிவிட்டுப் போகட்டுமே! பிரிவினைக்கு காரணம் யார்? வி.கோபாலன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: சமீபத்தில் லோக்சபாவில், 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்த விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'பாகிஸ்தான் ஒரு நாடாக தோன்றியதற்கு காரணமே காங்கிரஸ் கட்சி தான்...' என்றார். அவர் கூறியது முற்றிலும் உண்மையே! சுதந்திர போராட்ட காலத்தில், 1938ல் காங்கிரஸ் தலைவர்களுக்கும் அப் போதைய பிரிட்டிஷ் வைஸ் ராயர் லார்டு லின்லித்தோவுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் பெரும்பான்மை செல்வாக்கு பெற்றிருந்த மாநிலங்களில், காங்., அமைச்சரவை அமைக்க ஒப்புதல் அளித்தார் வைஸ்ராயர். அவ்வகையில், அப்போது, சென்னை மாகாண முதல்வராக ராஜாஜியும், குஜராத் உள்ளிட்ட பம்பாய் மாகாணத்தின் முதல்வராக பி.ஜி.கேர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மத்திய மாநிலங்களின் முதல்வராக ரவி சங்கர் சுக்லாவும், உ.பி., உள்ளிட்ட ஐக்கிய மாநிலங்களின் முதல்வராக புருேஷாத்தமன் தாண்டனும் இருந்தனர். ஐக்கிய மாநிலங்களில் ஒன்றான உ.பி.,யில் முஸ்லிம் லீக் கட்சியும் ஓரளவு பலத்துடன் இருந்தது. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் முதல்வர் புருேஷாத்தமன் தாண்டனிடம், தங்கள் கட்சியை சேர்ந்த இரண்டு பேர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறினர். அதை முதல்வர் தாண்டனும், காங்., தலைவர்களும் ஏற்கவில்லை. இதில் ஏமாற்றமடைந்த முஸ்லிம் லீக் தலைவர்கள், 'இப்போதே அதிகாரம் தர மறுக்கின்றனரே... இந்தியா சுதந்திரம் அடைந்த பின், முஸ்லிம்களின் எதிர்காலம் என்னவாகும்' என நினைத்து கவலைப்பட்டனர். அதனால், அவர்கள் பம்பாய்க்கு விரைந்து, ஜின்னாவிடம் தங்கள் கவலையை தெரிவித்து, 'முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும்' என்ற கோரிக்கை வைத்தனர். அவரும் அவர்களின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் என்ற தனி நாட்டிற்காக போர் கொடி துாக்கினார். பின் நடந்த சம்பவங்கள் நாம் அனைவரும் அறிந்ததே! அன்று மட்டும் முஸ்லிம் லீக் கட்சியின் கோரிக்கையை ஏற்று, ஐக்கிய மாநிலங்களின் அமைச்சரவையில் இரண்டு முஸ்லிம்களுக்கு பதவி கொடுத்திருந்தால், தனி நாடு கோரிக்கை எழுந்திருக்காது; நாடும் பிரிவினையை சந்தித்திருக்காது! அன்று நாடு பிளவுபடவும், பாகிஸ்தான் என்ற நாடு உருவாகவும் காரணமாக இருந்த காங்., கட்சி தான், இன்று மதச்சார்பின்மை பேசி, உள்நாட்டிற்குள் பிரிவினையை விதைத்து வருகிறது! அரசு ஆலோசிக்குமா? செ.சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எழுத்தாளர் மகேந்திரன் என்பவர், சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஆச்சரியப்படும் விதமாக ஒரு தகவல் கூறினார். அது, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவில் உள்ள, 72 கிராமங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள், அதாவது, தொட்டிய நாயக்கர் எனும் சமூகத்தினர் எவரும் மது அருந்துவது இல்லையாம். இதனால், அக்கிராமங்களில் சண்டை சச்சரவுகள், கலவரங்கள், வழக்குகள் ஏற்பட்டது கிடையாது. காவல் நிலையத்திற்கு சென்றதும் இல்லையாம். 'தமிழக அரசு இம்மாதிரியான கிராமங்களை ஆய்வு செய்து, அம்மக்களை பாராட்டும் வகையில், அக்கிராமங்களை மேன்மக்கள் கொண்ட கிராமங்களாக அறிவிக்க வேண்டும்' என்றார், மகேந்திரன். மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் மாதந்தோறும், 1,000 ரூபாயும், வேறு பல இலவச திட்டங்களையும் செயல்படுத்தி வரும், தி.மு.க., அரசு, மதுபழக்கம் இல்லாத கிராமங்களுக்கும் இதுபோன்ற சிறப்பு சலுகைகளை அளிக்கலாம். இதன் வாயிலாக, பிற கிராமத்தினரும், இதை முன்மாதிரியாக எடுத்து, மது பழக்கத்திற்கு ஆளாகமாட்டார்கள். அப்பழக்கம் இருந்தால் அதிலிருந்து விடுபடவும் நினைக்கலாம் அல்லவா? அரசு இதுகுறித்து ஆலோசிக்குமா? பிரதமர் அறிவிப்பாரா? ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தற்போது அமலில் உள்ள ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை மாற்றியமைக்க போவதாக, சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி அறிவித் துள்ளது வரவேற்கத்தக்கது. 70 சதவீத ஜி.எஸ்.டி., வரி நடுத்தர மற்றும் வறுமை நிலையில் உள்ள மக்களிடமிருந்து வசூல் செய்யப்படுகிறது என்ற கசப்பான உண்மை ஒருபுறம் இருக்க, எல்.ஐ,.சி., பிரீமியத்துக்கும் இந்த வரி விதிக்கப் படுவது வேதனை அளிக்கிறது. தனக்கு பின், தன் குடும்ப வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் எதிர்கால சேமிப்பாக நினைத்து, அனைத்து தரப்பினரும் தேர்வு செய்வது, 'ஆயுள் காப்பீடு' தான்! அதற்கும் வரி விதிப்பது எந்த வகையில் ஏற்புடையது? எனவே, ஆயுள் காப்பீடு பிரீமியத்துக்கு, ஜி.எஸ்.டி., வரியை அறவே நீக்க வேண்டும். இதை பிரதமர் அறிவிப்பாரா?