உள்ளூர் செய்திகள்

 இது உங்கள் இடம்

கேட்பவர் நெஞ்சம் கேலி செய்யும்!டி.பாரதி ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வில் இணைந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், 'சிபி சக்கரவர்த்தியின் மடியில் விழுந்த புறா போல், நான் ஸ்டாலின் மடியில் விழுந்திருக்கிறேன்' என்று, புளகாங்கிதம் அடைந்துள்ளார்.நீதி நெறிமுறை வழுவாமல் தர்மநெறியில் ஆட்சி செய்த மன்னன் சிபி சக்கரவர்த்தி, ஒரு நாள் அரண்மனை தோட்டத்தில் அமர்ந்திருந்தபோது, காயமடைந்திருந்த புறா ஒன்று அவர் மடியில் விழுந்ததாம். புறாவை துரத்தி வந்த பருந்து, 'அரசே... அது எனக்கான உணவு; என்னிடம் கொடுத்து விடுங்கள்' என்றதாம்.'அடைக்கலம் தேடி, என் மடியில் விழுந்த இப்பறவையை உன்னிடம் ஒப்படைப்பது தர்மம் அல்ல; அதற்கு பதில் வேறு கேள்' என்றார்.'அப்படியெனில், நான் பசியாற இந்த நிமிடமே இப்புறாவின் எடையளவு மாமிசம் வேண்டும்' என்றது, பருந்து.கணநேரம் கூட தாமதியாது, பணி யாளரை அழைத்து, கத்தியும் தராசும் எடுத்துவரச் சொல்லி, தன் தொடை சதையை வெட்டி, புறாவின் எடைக்கு நிகராக தராசில் வைத்தார். எவ்வளவு வைத்தும், புறாவின் எடைக்கு சமமாகவில்லை என்றதும், தானே தராசில் ஏறி அமர்ந்தாராம்.இப்படி, தர்மத்தை காக்க தன்னையே தரத் துணிந்தவர் சிபி சக்கரவர்த்தி.ஆனால், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் துறந்தவர்களின் தியாகத்தில் பலனடைந்த கட்சி, தி.மு.க.,எம்.ஜி.ஆரின் வியர்வையில் முதல்வர் பதவியில் அமர்ந்தவர், கருணாநிதி; அவர் புத்திரரான ஸ்டாலினோ, பாலியல் குற்றவாளிகளையும், போதைப் பொருட்கள் குற்றவாளிகளையும் தன் கட்சிக் காரர் என்பதால், காபந்து பண்ணும் தயாள சிந்தனையாளர்.இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதாவின் காலில் விழுந்து, இரு முறை அமைச்சராகவும், இருமுறை ராஜ்ய சபா எம்.பி.,யாகவும் கோலோச்சி கொழுத்த வைத்திலிங்கம் எனும் புறா, இப்போது, ஸ்டாலின் எனும் சிபி சக்கரவர்த்தி மடியில் விழுந்து கிடக்கிறது.ஐந்து ஆண்டுக்கு முன்பே தி.மு.க.,வில் சேர பிள்ளையார் சுழி போட்டு விட்டுத் தான், இந்த புறா இப்போது மீண்டும் பதவிக்காக ஸ்டாலின் மடியில் விழுந்துள்ளது.எனவே, புறாவுக்காக தன் உயிரையே கொடுக்க துணிந்த சிபி சக்கரவர்த்தியோடு ஸ்டாலினை ஒப்பிடுவது, கருணையே வடிவான அன்னை தெரசாவோடு, உகாண்டா அதிபர் இடி அமினை ஒப்பிடுவது போலவும், அ.தி-.மு.க.,வில் வசதியாக வாழ்ந்து விட்டு, இப்போது, மீண்டும் அமைச்சர் பதவியை தேடி தி.மு.க.,வில் இணைந்து, அப்பாவி புறாவோடு தன்னை ஒப்பிடுவது, கள்ளப் பூனை கிளி வேட்டைக்கு போவது போலவும் உள்ளது.ஆகவே, இதுபோன்று பதவி சுகத்துக்காக கட்சி விட்டு கட்சி தாவும் அரசியல்வாதிகள் பொருத்தமான உவமைகளை சொன்னால் கேட்பவர் நெஞ்சம் கேலி செய்யாது!காங்கிரசுக்கு இதைவிட கேவலம் வேறில்லை! பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்' என்று கூறி, காங்.,கை மிகவும் கேவலப்படுத்தியுள்ளார் மதுரை தி.மு.க., - எம்.எல்.ஏ., தளபதி. இதற்கு முன்பும் காங்., கட்சியை பலமுறை அவமானப்படுத்தியுள்ளனர், தி.மு.க.,வினர். கூட்டணி தர்மத்தை மதிக்காமல், காங்., கட்சியினர் மனம் புண்படுமே என்று நினைக்காமல், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளியை நேரில் சந்தித்து கட்டியணைத்து மகிழ்ந்தார், முதல்வர் ஸ்டாலின். காங்., கட்சியின் அடையாளமான காமராஜரை, 'ஏசி இல்லாமல் துாங்க மாட்டார்' என்று அவமரியாதை செய்தார், தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா. 'காங்., தலைவர்கள், பணக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு தான் வருவர்; ஆனால், தி.மு.க., சாமானியர்களுக்கும் மதிப்பளிக்க கூடிய கட்சி' என்றார், அமைச்சர் பெரியசாமி. கூட்டணியில் இருந்து கொண்டே இதுபோன்று தொடர்ந்து காங்.,கை இழிவுபடுத்திக் கொண்டு இருக்கின்றனர், தி.மு.க.,வினர். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்களோ, 'தி.மு.க.,வை எதிர்த்தால் கூடுதல் சீட் பெற முடியாது' என்று நினைத்து, அத்தனை அவமானங்களையும் தாங்கிக் கொண்டு, சீட்டுக்காக கைகட்டி வாய் பொத்தி நிற்கின்றனர். மஹாத்மா காந்தியின் அன்றைய காங்கிரஸ், உயிரையும் துச்சமென நினைத்து வெள்ளையரை எதிர்த்து தீரமுடன் போராடியது; இன்றைய ராகுல் தலைமையிலான காங்., சுயமரியாதையை இழந்து ஓட்டுக்காக பிரிவினைவாதிகளிடமும், சீட்டுக்காக ஊழல்வாதி களிடமும் மண்டியிட்டுக் கொண்டிருக்கிறது! பழனிசாமி மாண்புடன் செயல்படுவாரா? வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, இ - மெயில்' கடிதம்: ------------------------------------------------------- சில ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க.,வின் முக்கியப் புள்ளியாகவும், ஜெயலலிதாவின் விசுவாசியாகவும், அவருக்கு வலது கரமாகவும் விளங்கிய பன்னீர்செல்வத்தின் நிலை, இன்று பரிதாபமாக உள்ளது. அவருடன் இருந்த விசுவாசிகள் ஒவ்வொருவராக கழன்று, தி.மு.க.,விலும், த.வெ.க.,விலும் ஐக்கியமாகி வருகின்றனர். அனைவராலும் தனித்து விடப்பட்ட பன்னீர்செல்வத்தை, பழைய சம்பவங்களை மறந்து மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதன் வாயிலாக, அ.தி.மு.க., மேலும் பலப்படும். இல்லையேல், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஓட்டுகள் மாற்றுக் கட்சிக்குச் சென்று விடும். ஏற்கனவே, வரும் சட்ட சபையில் நான்கு முனை போட்டி நிலவும் நிலையில், ஓட்டுகள் பிரிந்து, சொற்ப ஓட்டுகள் தான், வெற்றியை தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருக்கும். எனவே, ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என நினைத்து, வறட்டுப் பிடிவாதத்தை விட்டு, பன்னீர்செல்வத்தை அரவணைத்துக் கொள்ள வேண்டும். செங்கோட்டையனை விடவா பன்னீர்செல்வம் துரோகம் செய்து விட்டார்? கிட்டத்தட்ட, 50 ஆண்டு காலம் எம்.ஜி. ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் விசுவாசியாக இருந்து, பதவி சுகங்களை நன்கு அனுபவித்து விட்டு, பதவி மோகம் தீராததால், இப்போது, த.வெ.க.,வில் இணைந்துள்ளார், செங்கோட்டையன். ஆனால், பன்னீர் செல்வம் அப்படி எதுவும் செய்யவில்லை; உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காமல், அ.தி.மு.க.,விற்கே திரும்பி வர எண்ணுகிறார். தன்னை சேர்த்துக் கொள்ளும்படி கெஞ்சும் நிலைக்கு இறங்கி வந்தும், பழனிசாமி பிடிவாதம் பிடிப்பது, அ.தி.மு.க., தொண்டர்களுக்கே பிடிக்கவில்லை. உலகில் தவறு செய்யாத மனிதர்கள் என்று எவரும் இல்லை; அதே நேரம், அத்தவறை உணர்ந்து வருந்துவோரை, மன்னித்து அரவணைத்துக் கொள்வது தான், மனித மாண்பு! பழனிசாமி மாண்புடன் செயல்படுவாரா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 07, 2026 06:40

EPS என்ன பெரிதாக தேர்தலில் வென்று முதல்வரானாரா? கூவத்தூர் நாடகத்தில் sponsor ஆக இருந்ததால் சசிகலா தயவில் பெற்ற பதவிதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை