உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  எவர் முரட்டு அடிமை!

 எவர் முரட்டு அடிமை!

கோ. பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார். அதனால் தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட நினைக்கும் மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க மறுக்கிறார்' என்று கூறியுள்ளார், துணை முதல்வர் உதயநிதி. அதற்கு, 'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த கருணாநிதியையும் முரட்டு அடிமை என்று உதயநிதி சொல்வாரா?' என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார், பழனிசாமி. தி.மு.க.,வினரால், 'குல்லுகபட்டர்' என்று விமர்சிக்கப்பட்ட ராஜாஜி ஆட்சி காலத்தில், மாணவர்கள் தினமும் அரைநாள் படிப்பு, மீதி அரை நாள் ஏதாவது கைத்தொழில் கற்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு, 'குலக்கல்வி திட்டம்' என்று நாமகரணம் சூட்டி, இத்திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது, தி.மு.க., பின், 1967ல் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற பேராசையால், கொள்கை வேறுபாடு கொண்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் கூட்டணி வைத்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது, தி.மு.க., அதேபோன்று, 1975ல் முன்னாள் பிரதமர் இந்திரா எமர்ஜென்சியை பிரகடனம் செய்தபோது தி.மு.க., பல இன்னல்களுக்கு ஆளானது. தொடர்ந்து, 1976ல் தி.மு.க., அரசை டிஸ்மிஸ் செய்தார், இந்திரா. இதே காலகட்டத்தில் மிசா சட்டத்தின் கீழ் முரசொலி மாறன், ஸ்டாலின், ஆசைத்தம்பி போன்றோர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும், 1979ல் பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று முழக்கமிட்டார், கருணாநிதி. பின், 1999 அக்டோபரில் நடந்த பார்லி மென்ட் தேர்தலில் தி.மு.க., - பா.ஜ.,வுட ன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. மத்திய அமைச்சரவையில் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராஜா போன்றோர் இடம் பெற்றனர்; பா.ஜ., அமைச்சரவையில் கல்லா கட்ட முடியவில்லை என்பதால், அமைச்சரவையிலிருந்து விலகினர். அத்துடன், 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் மத்தியில் காங்., அமைச்சரவையில், தி.மு.க., இடம் பெற்றது. இக்காலகட்டத்தில் தான் புகழ்பெற்ற, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் நடந்தது. இதன் காரணமாக, கருணாநிதியின் அன்பிற்குரிய ராசா மற்றும் மகள் கனிமொழி திகார் ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்தனர், மனைவி தயாளு அம்மாள் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதற்காக, 'கூடா நட்பு கேடாய் முடிந்தது' என, தன் வருத்தத்தை தெரிவித்தார், கருணாநிதி. இவற்றையெல்லாம் தாண்டி இப்போதும் தி.மு.க., காங்கிரசுடன் கூடா நட்பில் இருக்கிறது. எனவே, கருணாநிதியை பா.ஜ.,வின் முரட்டு அடிமை என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் பழனிசாமி அடைத்துவிடா மல், பா.ஜ., - காங்., என அனைவருக்குமான முரட்டு அடிமை கருணாநிதி என்று கூறுவது தான் சாலச் சிறந்தது!  பன்னீர்செல்வம் செய்த தவறு என்ன? டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், மூன்று முறை முதல்வராக்கப்பட்ட பன்னீர்செல்வம், சட்டசபையில் ஜெயலலிதாவின் துகிலுரிந்த கட்சியான தி.மு.க.,வில் இணைந்து, தன் விசுவா சத்தை நிலைநாட்டி விட்டார். இதில், சில தினங்களுக்கு முன், 'கட்சிக்கு நான் செய்த தவறு என்ன என்று சொன்னால், அரசியலில் இருந்து விலகுகிறேன்' என்று சவால் விட்டார், இந்த தர்ம யுத்த நாயகன். இதோ பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதே! சரி... பன்னீர்செல்வம் கட்சிக்கு செய்த துரோகம் என்னவென்று பார்ப்போம்... கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை முதல்வர் பழனிசாமி திறந்த போது, 'தண்டனை பெற்ற கைதி ஜெயலலிதா; அவரது படத்தை சபையில் வைப்பது தவறு' என்று கூறி, அந்நிகழ்ச்சியை புறக்கணித்தது, தி.மு.க., அதே சட்டசபையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை திறந்த போது, அதில் பன்னீர்செல்வம் பங்கேற்றதுடன், 'என் குடும்பமே கருணாநிதியின் பக்தர்கள்' என்று புகழாரம் சூட்டியது, ஜெயலலிதாவுக்கு செய்த துரோக தவறு. அ.தி.மு.க., பொதுக் குழுவில் பன்னீர்செல்வத்தை நீக்கியபோது, தன் ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து, அனைத்தையும் அடித்து உடைத்து கோப்புகளை அள்ளிச் சென்றது மன்னிக்க முடியாத தவறு. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று, தன் சிஷ்யர் எம்.எல்.ஏ., அய்யப்பனை சபையில் பேச வைத்து, அதற்கு வழிமொழிவது போல் எழுந்து நின்று இரு கைகளால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னதும், 'மீண்டும் தி.மு.க.,வே ஆட்சிக்கு வரும்' என்று சொன்னதும் அ.தி.மு.க.,வின் கொள்கைக்கு எதிரான தவறு. இப்படி எல்லா தவறுகளையும் செய்து விட்டு, நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்கிறார், பன்னீர்செல்வம். தன்னை அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொள்ள விரும்பி, எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா மனு வழங்கிய போது, 'அண்ணாயிசம்' எனும் அ.தி.மு.க.,வின் கொள்கை புத்தகத்தை படிக்க சொல்லி அதிலிருந்து கேள்விகள் கேட்டு, அதன்பின், ஜெயலலிதாவை கட்சியில் இணைத்துக் கொண்டார், எம்.ஜி.ஆர்., அதன்பின்பே, அவருக்கு உறுப்பினர் அட்டையே வழங்கப்பட்டது. பின், கொள்கை பரப்பு செயலர், சத்துணவு திட்ட உயர்மட்ட குழு உறுப்பினராகவும், ராஜ்யசபா எம்.பி.,யாகவும் ஆக்கினார் எம்.ஜி.ஆர்., அவரது எண்ணப்படி தி.மு.க.,வை தன் உயிர் உள்ளவரை எதிர்த்தார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர்., நேர்முகத் தேர்வு வைத்து, தன்னை தேர்வு செய்தது போல், ஜெயலலிதா பன்னீர்செல்வத்தை தேர்வு செய்திருந்தால், அ.தி.மு.க.,வில் மூன்று முறை முதல்வராக இருந்த நன்றி மறந்து, இன்று தி.மு.க.,வில் இணைந்திருக்க மாட்டார், பன்னீர்செல்வம். கொள்கை பிடிப்பில்லாத, கட்சிக்கு விசுவாசம் இல்லாத, நன்றி மறந்த பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.,வில் இணைத்து, முதல்வராக்கியது ஜெயலலிதா செய்த தவறு எனும் போது, பன்னீர்செல்வத்திடம் விசுவாசத்தை எதிர்பார்க்க முடியுமா?  தேர்தலில் சமூகநீதி காக்குமா தி.மு.க.,! சுக.மதிமாறன், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமூகநீதி காக்க கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரும் தி.மு.க.,வினர், அதை தங்கள் கட்சியில் பின்பற்றுகின்றனரா என, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மகளிருக்கான, 33 சதவீத இடஒதுக்கீடு, 2029க்கு பின் அமல்படுத்தப்படும் என, இரண்டாண்டுகளுக்கு முன் மத்திய பா.ஜ., அரசு கூறியபோது, அதை குறை கூறி, 'மகளிருக்கு முன்னுரிமை கொடுப்பதில் நாட்டிற்கே தமிழகம் தான் முன்னோடி யாக திகழ்கிறது' என, தன்னைத் தானே பாராட்டிக்கொண்டார், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின். அதை நடைமுறைப்படுத்தும் விதமாக, வரும் சட்டசபை தேர்தலில் மகளிருக்கு, 33 சதவீதம் ஒதுக்கி வேட்பாளரை நிறுத்துவாரா? சமூகநீதியை காக்க தன் கட்சி பட்டியலின வேட்பாளர்களை, பொது தொகுதியில் நிறுத்துவாரா முதல்வர் ஸ்டாலின் ? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ