| ADDED : நவ 25, 2025 11:28 PM
தே.மு.தி.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம், மதுரை கூடல் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா, 'என்னை வருங்கால தமிழகமே, ஜான்சிராணி, நாளைய முதல்வர் என்றெல்லாம் நம் கட்சியினர் கூறுகின்றனர். நம் கட்சியின் மண்டல பொறுப்பாளர் பன்னீர்செல்வம் ஒருபடி மேலே சென்று, 'பிரதமர் பிரேமலதா மேடம்' என்று சொல்லி விட்டார். கடவுளின் கணக்குப்படி யாருக்கு என்ன நடக்கும் என்று தெரியாது...' என, பேசினார். உடனே, இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 'நாளைய பிரதமர் அண்ணியார் வாழ்க' என்று தொண்டர்கள் கோஷமிட்டனர். இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'விட்டால், அடுத்த அமெரிக்க அதிபரே எங்க அண்ணியார் தான்னு சொல்வாங்க போலிருக்கே...' என 'கமென்ட்' அடிக்க, சக நிருபர், 'அதானே, கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா...' என, அலுத்தபடியே அங்கிருந்து கிளம்பினார்.