சாமர்த்தியமா நழுவிட்டாரு!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, திருச்சியில் பிரசாரம் செய்தபோது, 'பஞ்சப்பூர் பகுதியில் அமைச்சர் நேருவுக்கு, 300 ஏக்கர் நிலம் இருப்பதால் தான், அங்கு புது பஸ் ஸ்டாண்ட் கட்டினார்' என குற்றஞ்சாட்டினார். சில நாட்களுக்கு பின், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் நேரு அளித்த பேட்டியில், 'பஞ்சப்பூர் பகுதியில் எனக்கு நிலம் இருந்தால், அரசே அதை எடுத்துக் கொள்ளட்டும் அல்லது பழனிசாமி கூட எடுத்துக் கொள்ளட்டும்' என்றார். இதைக் கேட்ட இளம் நிருபர் ஒருவர், 'என் மீது அபாண்டமா குற்றஞ்சாட்டிய பழனிசாமி மீது மானநஷ்ட வழக்கு போடுவேன்னு பொங்காம, நேரு அடக்கி வாசிக்கிறாரே...' என்றார். மூத்த நிருபரோ, 'இவர் வழக்கு போட, அவர் ஆவணங்கள் இருக்குன்னு பதிலடி தந்து, தேர்தல் நேரத்துல பிரச்னையை வளர்க்க வேண்டாம்னு தான், சாமர்த்தியமா நேரு நழுவிட்டாரு பா...' என கூற, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே நடந்தனர்.