இதை விட பொய் வேற உண்டா?
சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்து, நாட்டு நலப்பணி திட்ட அமைப்பு சார்பில் மூன்று நாள் பயிற்சி பட்டறை நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், 'திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி மிக ஆபத்தானது. பிறப்பால் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் கிடையாது. பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது. அப்படி ஒன்று இருந்தால், அதை ஒழிக்க வேண்டும் என, மூன்று ஆண்டுகளுக்கு முன் பேசினேன். 'அதை திரித்து, இனப்படுகொலைக்கு துாண்டுவதாக, பொய் செய்தி பரப்பினர். சமூக வலைதளத்தில், 'எது ரீல், எது ரியல்' என்பதை நீங்கள்தான் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்' என்றார். இதை கேட்ட மாணவர் ஒருவர், 'டெங்கு கொசு போல் சனாதன தர்மத்தை ஒழிப்போம்னு பேசிட்டு, வேற எதையோ பேசினேன்னு மழுப்புறதை விட பொய் செய்தி வேற உண்டா...' என முணுமுணுக்க, சக மாணவர்கள் ஆமோதித்தனர்.