அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: கொரோனாவுக்கு
பின், அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்க மறுக்கும் ஒரே மாநிலமாக
தமிழகம் மட்டுமே உள்ளது என்பது தான் வருத்தமான உண்மை. இந்நிலையில், தற்போது
மீண்டும் கொரோனா பரவல் துவங்கியுள்ள சூழலில், முதல் நடவடிக்கையாக, கொரோனா
பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு
அரசு வேலை தர வேண்டும் என, தமிழக முதல்வரை வேண்டுகிறோம்.இவங்களும் நாலு வருஷமா கேட்டும், அரசும் கண்டுக்காமலே இருக்குது என்றால், பின்னணியில் வேற ஏதாவது பிரச்னை இருக்குமோ? அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தண்டனை வரவேற்கக் கூடியதே. ஆனால், அந்த வழக்கின் புலன் விசாரணையை, குறிப்பிட்ட ஒருவரோடு மட்டும் நிறுத்திக் கொண்டது ஏன்? 'அந்த ஒரு நபரை தாண்டி, விசாரணை வலையை விரிக்க வேண்டாம்' என, லட்சுமண ரேகை போட்டது யார்? விசாரணை துவங்குவதற்கு முன்பாகவே, காவல் துறை உயர் அதிகாரி, 'இந்த வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி' என்று சொன்னது ஏன்?இப்படி பல ஏன்களுக்கு எல்லாம், இவங்க ஆட்சிக்கு வந்து விசாரணை நடத்தினால் தான் விடை கிடைக்கும்!புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி அறிக்கை: தங்கள் திரைப்படங்களை அண்டை மாநிலங்களில் ஓட்ட முடியாதபோது, அந்த மொழி மக்களிடம் மன்னிப்பு கேட்டது தான் தமிழக நடிகர்களின் இயல்பு. கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் பேச்சு அர்த்தமற்றது; அவசியமற்றது. அவரது பேச்சு, இரு மாநில மக்கள் பிரச்னையாக வெடித்து விடக்கூடாது. நடிகர் கமல், அம்மாநில மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.கமலுக்கும், இவருக்கும் இருந்த விருமாண்டி பட பஞ்சாயத்து தகராறை மனசுல வச்சு, இப்ப கமலை கோர்த்து விடுறாரோ?அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் உதயகுமார் அறிக்கை: தமிழகத்தின் சிறிய மாவட்டமான செங்கல்பட்டில் மட்டும், நான்கு ஆண்டுகளில், 717 பாலியல் வழக்குகள் நீதிக்காக காத்திருக்கின்றன. பல வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளன. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அனைத்து பாலியல் வழக்குகளும் மீண்டும் விசாரிக்கப்பட்டு, குற்றம் செய்த அனைத்து, 'சார்'களுக்கும், சட்டத்தின் முன் தக்க தண்டனை பெற்றுத் தரப்படும். அனைத்து, 'சார்'களிலும், அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கில் பேசப்பட்ட, 'சாரும்' இருப்பாருல்ல!