| ADDED : ஜூன் 10, 2024 01:36 AM
ஏ.ஐ., தொழில்நுட்ப திறமையை வைத்து, கற்பனைகளுக்கு உருவம் கொடுத்து இன்ஸ்டாகிராமில் ஜாலியாக ரகளை செய்து வரும், மேற்கு வங்கத்தை சேர்ந்த அபு சாகித்: நான் மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் இருக்கும் ஆரம்பாக் பகுதியை சேர்ந்தவன். சிறு வயதிலிருந்தே வரைவதில் அதீத ஆர்வம் உண்டு. எட்டு ஆண்டுகளுக்கு முன், கல்லுாரி படிப்பை முடித்தவுடன் கிராபிக் டிசைனராக மும்பையில் வேலைக்கு சேர்ந்தேன்.பாலிவுட் படங்களில் கிராபிக் டிசைனராகவும், காட்சி படிம அதாவது, வி.எப்.எக்ஸ்., இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளேன். 2022-ல், அமெரிக்க கலைஞர்கள் சிலரின் ஏ.ஐ., படைப்புகளை பார்த்தேன். இந்தியாவுக்கு அது எப்போது வரும் என, ஆவலோடு காத்திருந்தேன். அங்கிருந்து தான் இந்த ஏ.ஐ., பயணம் துவங்கியது.'பேரலல் யூனிவர்ஸ் கான்செப்ட்' தான் என் கற்பனைக்கு அடித்தளம். இங்கே இன்னொரு உலகம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் அத்தனை காசு செலவு செய்து நாம் அதை தேடி கொண்டிருக்கிறோம். அந்த மாற்று உலகத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கற்பனை இருக்கும். அங்கே நாம் தான் சூப்பர் ஹீரோ. ஆகையால் நான் இங்கிருக்கும் மனிதர்களை வைத்தே அப்படி ஒரு உலகத்தை யோசித்து பார்க்கிறேன். என் ஒவ்வொரு படைப்பும் சமூக வலைதளத்தில் லட்சம் லைக்குகளை கடந்து பரவ, இதை ஒரு பொழுதுபோக்காக மட்டும் செய்யாமல், 'மேகாலுட்டன்' என்ற நிறுவனத்தை துவங்கி மார்க்கெட்டிங் பணியை வித்தியாசமாக செய்து வருகிறேன். நான் எப்போதும் ட்ரெண்டில் இருக்கும் விஷயங்களை வித்தியாசமாகவும், வருங்காலத்தை யோசித்தும் பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். சுட்டெரிக்கும் வெயில் காலத்தில், 'தலையை சுற்றி பனிக்கட்டி இருந்தா நல்லா இருக்குமே' என்ற குளுகுளு எண்ணம் அனைவருக்கும் தோன்றுவது இயல்பே. அந்த ஆசையை நிறைவேற்றும் பேரார்வம் தான் என் கலை. அதில் காலநிலை மாற்றம் குறித்த கவலை இல்லாத நபர்களையும் நையாண்டி செய்கிறேன்.மேற்கு வங்கத்தில் 18 வயது தாண்டிய பலரும் அரசியல் அறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர். நாம் சிரித்து ஜாலியாக கடந்து செல்லும் அனைத்திலுமே அரசியல் இருக்கிறது. அதிலிருந்து தான் மோடி காங்கிரசில் இருப்பதாகவும், ராகுல் பா.ஜ.,-வில் இருப்பதாகவும் ஐடியா யோசித்தேன். 'என் காலணியில் நின்று பார்த்தால் தான் என் வலி என்னவென்று புரியும்' என்று ஒரு பழமொழி உண்டு. அதை தான் செய்தேன். கொள்கை, கோட்பாடு, வாழ்க்கை முடிவுகள் எதுவாக இருந்தாலும், பிடிவாதமாக நம் இடத்திலிருந்து, 'நாம் தான் சரி' என்று சிந்தித்தால் வெறுப்பு தான் மிஞ்சும். அதை மாற்றி யோசித்து தான் பார்ப்போமே!