குழந்தைகள் குப்புற படுக்க பயிற்சி தேவை!குழந்தைகளை குப்புறப் படுக்க ஈடுபடுத்தும் பயிற்சி நேரமான, 'டம்மி டைம்' பற்றி கூறும், குழந்தைகள் நல மருத்துவர், கோபால கிருஷ்ணன்: பிறந்து, மூன்று - ஐந்து மாதங்கள் வரை, பச்சிளம் குழந்தைகள், மல்லாந்து படுத்த நிலையிலேயே இருப்பர். பிறகு, இடது அல்லது வலது புறமாக, தாங்களே திரும்பிப் படுக்க முயன்று, குப்புறப் படுக்க ஆரம்பிப்பர்.குப்புறப் படுக்க, குழந்தைகள், சுய முயற்சிகளை ஆரம்பிக்கும் முன்னரே, பெற்றோர் அதற்கான வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.தினமும் குறிப்பிட்ட நேரம், அதற்கான பயிற்சியில், குழந்தையை ஈடுபடுத்த வேண்டும். அந்த நேரத்தை, 'டம்மி டைம்' என அழைக்கிறோம்.பிறந்து ஒரு மாதமான குழந்தையில் இருந்து, குழந்தை, தானே மல்லாந்து படுக்கத் தயாராகும் வரை, இப்பயிற்சியைக் கொடுக்கலாம்.இந்த முறையில், குழந்தைகளை இடது அல்லது வலது புறமாக ஒருக்களித்துப் படுக்க வைக்க வேண்டும். சில நாட்களுக்குப் பின், குழந்தைகளை குப்புறப் படுக்க வைக்கலாம்.இப்பயிற்சியால், குழந்தையின் நரம்பியல் வளர்ச்சி, நன்றாக இருக்கும். குழந்தையின் கழுத்து, தோள், கை மற்றும் கால் பகுதிகளிலுள்ள தசைகள் பலமாகும்; உடல் இயக்கங்கள், சீராக நடைபெறும்.பிறந்த ஆறு மாதங்களுக்குள், குழந்தை, தானாகவே குப்புறப் படுக்க ஆரம்பிக்க வேண்டும். அதற்கு சுயமுயற்சி எடுக்காத குழந்தைகளுக்கு, இந்த பயிற்சிகள் உதவும். அப்படியும், குழந்தை குப்புறப் படுக்கவில்லை எனில், அதன் வளர்ச்சியில் குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், மருத்துவ ஆலோசனை அவசியம்.பால் குடித்தவுடன், குழந்தையைக் குப்புறப் படுக்க வைத்தால், வாந்தி எடுக்க நேரிடும்; எனவே, சிறிது நேரம் கழித்து செய்யலாம்.ஒரு மாத குழந்தையை, ஒரு நாளைக்கு, இரண்டு நிமிடங்களுக்கு குப்புறப் படுக்க வைக்கலாம். படிப்படியாக நேரத்தை அதிகரிக்கலாம். 5 -- 6 மாத குழந்தையை, ஒரு முறைக்கு, 20 நிமிடங்கள் என, ஒரு நாளைக்கு, எட்டு - 10 முறை வரை குப்புறப் படுக்க வைக்கலாம்.இந்த காலகட்டத்தில் குழந்தை, இயல்பாகவே குப்புறப் படுக்க ஆரம்பித்து விட்டால், பயிற்சியை நிறுத்தி விடலாம்.துாய்மையான துணியை தரையில் விரித்து, குழந்தையை அதில் படுக்க வைக்க லாம். அதேபோல், தாடைக்கு கீழே, ஒரு துண்டை மடித்து வைக்க வேண்டும்.இதனால், 'பேலன்ஸ்' இல்லாமல் முகத்தை தரையில் கவிழ்த்துக் கொள்ள நேர்ந்தாலும், குழந்தைக்கு அடிபடாது.குழந்தையின் கை தொடும் தொலைவில், சில பொம்மைகளை வைத்தால், அதை எடுக்க, தவழ முயலும். இப்பயிற்சியின் போது குழந்தையின் அருகில், கட்டாயம் ஒருவர் இருப்பது அவசியம்.