சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்தாண்டு ஆனி திருமஞ்சன தரிசன உற்சவத்தின்போது, கனகசபை மீதேறி தரிசனம் செய்வதை தீட்சிதர்கள் தடை செய்தனர்.இது குறித்து ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கனகசபையில் ஏறி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபை மீது நின்று தரிசனம் செய்தனர்.இந்நிலையில், இந்தாண்டு ஆனி திருமஞ்சன தரிசன விழா, கடந்த 3ல் துவங்கிய நிலையில் நேற்று 10ம் தேதி முதல், 13ம் தேதி வரையிலான நான்கு நாட்கள் கனகசபையில் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும்; பக்தர்கள், ஒத்துழைக்க வேண்டும் என தீட்சிதர்கள் அறிவித்தனர்.இது தொடர்பாக, சம்பந்தமூர்த்தி என்பவர், கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் தொடுத்த வழக்கில், கனகசபை மீதேறி தரிசனம் செய்யும் நடைமுறை தொடர வேண்டும் என, கோர்ட் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.அதையடுத்து, நேற்று காலை நடராஜர் கோவிலில், காலை 8:30 மணி முதல், திருச்சோபுரநாதர் கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரன், விருத்தகிரிஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மாலா, ஆகியோர் தலைமையில், போலீசார் பாதுகாப்புடன், தீட்சிதர்கள் அனுமதியுடன், கனகசபை மீது ஏறி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.