உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பெண் வி.ஏ.ஓ.,க்களிடம் அத்துமீறும் அதிகாரி!

பெண் வி.ஏ.ஓ.,க்களிடம் அத்துமீறும் அதிகாரி!

குளிருக்கு இதமாக, நாயர் தந்த சூடான மெது வடையை கடித்தபடியே, “பெரிய ஊழலே நடக்கறது ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.“எந்த துறையிலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.“அரசு மருத்துவமனைகள்ல, பிரசவத்துக்கு பின் தாய் மற்றும் குழந்தையை, இலவசமா வீட்டுல கொண்டு விடற திட்டம் ஒண்ணு இருக்கு... தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ், இதை செயல்படுத்திண்டு இருக்கா ஓய்...“இது, கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு ரொம்பவே, 'யூஸ்புல்'லா இருந்துது... இப்ப, இந்த திட்டத்தை பெரும்பாலான அரசு மருத்துவமனைகள்ல செயல்படுத்தறது இல்ல ஓய்...“ஆனாலும், குழந்தை மற்றும் தாயின் தகவல்களை மட்டும் கேட்டு வாங்கிக்கறா... இவாளுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து, வீடுகள்ல கொண்டு போய் விட்டதா கணக்கு காட்டி, நிதியை சுருட்டிக்கறா ஓய்...“இதுல, சில மாவட்ட தலைமை மருத்துவமனைகள்ல, தினமும் ஒற்றை இலக்கத்துல தான் பிரசவங்கள் நடக்கறது... ஆனா, வீட்டுல கொண்டு போய் விடற கணக்கை பார்த்தா, இரட்டை இலக்கத்துல வரது... இது பத்தி விசாரணை நடத்தினா, பெரிய ஊழல் வெளியில வரும் ஓய்...” என்றார், குப்பண்ணா.“நகராட்சி நிர்வாகத்தையே முடக்கிட்டாரு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...“திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சி தலைவியா, தி.மு.க.,வைச் சேர்ந்த பெண்மணி இருக்காங்க... ஆனாலும், ஆளுங்கட்சியின் நகர முக்கிய புள்ளி தான், நிர்வாகத்தை நடத்துதாரு வே...“இவருக்கு, மாவட்ட செயலரான, 'மாண்புமிகு'வின் ஆதரவும் இருக்கிறதால, நகராட்சி அதிகாரிகள், துணை தலைவர், தி.மு.க., கவுன்சிலர்கள்னு பலரையும் தன் கட்டுப்பாட்டுல வச்சுக்கிட்டு, நகராட்சி பணிகளை முடக்குதாரு வே...“டெண்டர் உள்ளிட்ட விஷயங்களை, தன் ஒப்புதல் வாங்கி தான் செய்யணும்னு சொல்லுதாரு... நகராட்சி தலைவியை தனிமைப்படுத்தி, அவங்க மேல அவதுாறுகளையும் பரப்பிட்டு இருக்காரு... இதனால, வெறுத்து போயிருக்கிற நகராட்சி தலைவி, 'பேசாம ராஜினாமா பண்ணிட்டு போயிடலாம்'னு புலம்பிட்டு இருக்காங்க வே...” என்றார், அண்ணாச்சி.“பெண்களுக்கு செல்ல பெயர் சூட்டி கூப்பிடுறாருங்க...” என்றார், அந்தோணிசாமி.“யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய்.“துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வருவாய் துறையில் ஒரு அதிகாரி இருக்காருங்க... இவர், ராத்திரி நேரங்கள்ல பெண் வி.ஏ.ஓ.,க்களை செல்ல பெயர்ல அழைச்சு, 'வாட்ஸாப்'ல மெசேஜ்களா தட்டி விடுறாருங்க...“சமீபத்துல ஒரு பெண் வி.ஏ.ஓ.,விடம் அத்துமீறி நடந்துக்கிட்டாருங்க... இதனால, அவர் கட்டுப்பாட்டுல பணிபுரியும் பெண் வி.ஏ.ஓ.,க்கள், தங்களுக்கு பாதுகாப்பு இல்லன்னு கோவில்பட்டி ஆர்.டி.ஓ.,விடம் புகார் குடுத்தாங்க...“ஆனா, அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் இல்ல... அடுத்த கட்டமா பெண் வி.ஏ.ஓ.,க்கள் மொத்தமா கையெழுத்து போட்டு, கலெக்டருக்கே புகார் அனுப்பிஇருக்காங்க...“அதுல, 'அதிகாரி அனுப்புற ஏடாகூடமான மெசேஜ்களால, குடும்பத்துல குழப்பம் ஏற்படுது... அவர் மீது சீக்கிரமா நடவடிக்கை எடுக்கலன்னா போராட்டத்துல ஈடுபடுவோம்'னும் எச்சரிச்சிருக்காங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anantharaman Srinivasan
டிச 26, 2024 23:23

பத்து பொம்பளைங்களா சேர்ந்து public லே அந்த அதிகாரியின் மானத்தை வாங்கணும்.


நிக்கோல்தாம்சன்
டிச 26, 2024 21:08

அந்த அதிகாரியின் செல்நம்பரை வெளியே விடுங்க சகோதரிகளே , இல்லை தமிழக காவல்துறையிடம் கொடுங்க , அவங்க வெளியே கசிய விடுவாங்க


Barakat Ali
டிச 26, 2024 07:54

பெண்கள் தனிமையில் இருக்கவோ/செல்லவோ கூடாது..தந்தையோ, சகோதரனோ, கணவனோ, பிள்ளையோ உடன் இருக்க வேண்டும் ... இஸ்லாத் கூறுவது இதைத்தான்.. பணிச்சூழலில் இப்படி இருப்பது சாத்தியமில்லை என்றால் அச்சூழல் வேண்டவே வேண்டாம் .... இந்தக்காலத்தில் இதைக் கடைபிடிக்க முடியாது என்றால் பிரச்னைகளை நாம் சந்திக்க வேண்டும்தான் ....


R.RAMACHANDRAN
டிச 26, 2024 07:15

இந்த நாட்டில் குற்றங்களுக்கு எதிராக எங்கு புகார் தெரிவித்தாலும்முதலமைச்சர்,பிரதமர்,குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு உட்பட அவை குற்றவாளிகளுக்கே அனுப்பி மூடி விடுவதால் குற்றவாளிகள் துணிந்து குற்றங்கள் செய்கின்றனர்.நீதி மன்றங்களும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதிலேயே குறியாக உள்ளன.


D.Ambujavalli
டிச 26, 2024 06:30

இத்தகைய அதிகாரிகளின் வீட்டுப் பெண்கள் வேலைக்குச் செல்ல மாட்டார்களா? அவர்களின் மேலிடம் இப்படி நடந்தால் கொதித்து எழ மாட்டார்களா? இவர்களை முச்சந்தியில் வைத்து அடிக்க வேண்டும், அதே பெண்களைக்கொண்டு


V.t.murali
டிச 26, 2024 07:56

அவர்களே அப்படிதான் இருப்பார்கள் போல....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை