தாம்பரம் மாநகராட்சியில் காலியாக உள்ள மண்டல குழு தலைவர் பதவிக்கு கடும் போட்டி
தாம்பரம்,நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதியை மீறி செயல்பட்ட, தாம்பரம் மாநகராட்சி, 40வது வார்டு கவுன்சிலரும், மூன்றாவது மண்டல குழு தலைவருமான ஜெயபிரதீப்பின் பதவி பறிக்கப்பட்டது.இதையடுத்து, அப்பதவிக்கு தேர்தல் நடத்தி, மண்டல குழு தலைவரை விரைவில் நியமிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.நகர்ப்புற தேர்தல் முடிந்தவுடன், மண்டல குழு தலைவர் பதவிக்கு, 37வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமியை, தி.மு.க., தலைமை அறிவித்தது.அப்போது, கட்சியில் பல மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது, அவரை அறிவித்தது, தி.மு.க., கவுன்சிலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஜெயபிரதீப், சுயேச்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன், மகாலட்சுமியை எதிர்த்து போட்டியிட்டார்.இதில், இருவருக்கும் சமமான ஓட்டுகள் விழுந்தன. தொடர்ந்து, குலுக்கல் முறையில் ஜெயபிரதீப், மண்டல குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.தலைமை அறிவித்தும், கவுன்சிலர்களை அரவணைத்து செல்லாததும், சீனியர்கள் இருக்கும் போது, மகாலட்சுமிக்கு வாய்ப்பு கொடுத்ததே தோல்விக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.தற்போது, ஜெயபிரதீப்பின் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க., தலைமை யாரை களமிறக்க போகிறது என்ற கேள்வி, தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.மீண்டும் மகாலட்சுமிக்கு வாய்ப்பு கொடுத்தால், ஏற்கனவே நடந்தது போல் நடக்க வாய்ப்புள்ளது என, ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.அதே நேரத்தில், செம்பாக்கம் வடக்கு பகுதி செயலராக உள்ள மகாலட்சுமியின் கணவர் கருணாகரன், அமைச்சர் அன்பரசனின் ஆதரவாளர்.அவர்கள், நிர்வாகிகளை மதிப்பதில்லை; எதற்கும் கலந்தாலோசிப்பதும் இல்லை என்பது, மற்றொரு தரப்பினரின் கருத்தாகும்.இதை பயன்படுத்தி, மண்டல குழு தலைவர் பதவியை பிடிக்க, சில கவுன்சிலர்கள் ரகசியமாக காய் நகர்த்தி வருகின்றனர். இதனால், அவர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், மூன்றாவது மண்டலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ற நபரை, மண்டல குழு தலைவராக நியமிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.