உள்ளூர் செய்திகள்

வழிகாட்டிய கிளி!

ஞாயிற்றுக் கிழமை -படுக்கையிலிருந்து எழுந்தான் அமல்; மணி 7:00 ஆகியிருந்தது.வீட்டுப் பாடங்களை எல்லாம் முந்தைய நாளே முடித்திருந்தான். மறுநாள் வகுப்பில் ஒப்பிக்க வேண்டிய பாடங்களையும் படித்து விட்டான். இன்று முழுதும் விளையாட எந்தத் தடையும் இல்லை. அப்போது வாசலில் வந்து நின்றான் விமல்.இருவரும், 7ம் வகுப்பில் படிக்கும் இணை பிரியாத தோழர்கள்.மேற்குத்தொடர்ச்சி மலை அருகே மணக்குடி கிராமத்தில் வசித்தனர். அந்த மலைச்சாரலில் செண்பகத்தோப்பு என்பது அடர்ந்த காடு; பகலிலும் இருள் படர்ந்திருக்கும். ஒரு மரத்தில் ஏறினால், காடு முழுதும் தாவிப்போக முடியும். ''என்ன அமல்... செண்பகத் தோப்பிற்கு போகலாமா...'' என ரகசியமாக கேட்ட விமலிடம் உடனே ஒப்புக் கொண்டான்.சிற்றுண்டி முடித்து, தோளில் தண்ணீர் பாட்டிலைத் தொங்க விட்டபடி, ''அம்மா... விளையாடப் போறேன்...'' என்றபடி, மிதிவண்டியில் புறப்பட்டான் அமல். வழியில் விமலும் சேர்ந்து கொண்டான்.தார்ச்சாலையை கடந்து சைக்கிளை நிறுத்தி ஒத்தையடிப் பாதையில் நடந்தனர். பின் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தனர்.பையைத் திறந்தான் விமல்; அதில் முறுக்கு இருந்தது; தின்று தண்ணீர் குடித்தனர்.அண்ணாந்து பார்த்தான். ஆலம் பழங்கள் சிவப்பு நிறத்தில் கொத்தாக கிடந்தன. அவை அசைந்து விழும் போல் தோன்றியது; சற்றே ஒதுங்கினான் விமல்.''அசையுறது பழம் இல்லை; கிளியின் மூக்கு; அது சிவப்பு நிறத்தில் ஆலம் பழம் போல் இருப்பதை பார்...'' என்றான் அமல்.காட்டின் அழகை ரசித்தபடி நடந்தனர்.திடீரென்று கிளியின் அலறல் கேட்டது. அதை, வேகமாகப் பறந்த பருந்து ஒன்று துரத்தியது. மேலும், கீழுமாக பறந்து தப்ப முயன்றது கிளி. ''அதோ பார்... மாட்டிக் கொள்ளும் போல் இருக்கிறது. உண்டி வில்லை எடு...'' என்றான் அமல்.அடித்தால், பருந்து நிச்சயம் தடுமாறும்; அதற்குள் கிளி தப்ப வாய்ப்பு இருப்பதை எண்ணி, குறி பார்த்து அடித்தான் அமல். தடுமாறியது கழுகு.அந்த இடைவெளியில் தப்பியது கிளி.இருவரும் சற்று துாரம் நடந்த பின், பாதை தெரியவில்லை. பசி அதிகரித்ததால், வந்த வழியே திரும்ப எண்ணினர்.வழியை தவறி விட்டாலும் தைரியமாக நடந்தனர். விமல் முகத்தில் பயம் படர்ந்திருந்தது. ஏதோ பேச நினைத்தவன் நாக்கு அண்ணத்துடன் ஒட்டியது.''பயப்படாதே... வழி கண்டுபிடித்து விடலாம்...''நம்பிக்கையூட்டியபடி அண்ணாந்து பார்த்தான் அமல். இலைகளின் ஊடாக நீலவானம் தெரிந்தது. தொலைவில் ஒரு பறவை பறப்பதாக தோன்றியது.''அதோ பார் கிளி... நிச்சயம் அந்த ஆலமரத்துக்குத்தான் போகிறது. அது பறக்கும் திசையில் நடப்போம்...'' நடையில் வேகம் காட்டி, ஆலமரத்தைக் கண்டனர். நன்றி கூறுவது போல் கிளியைப் பார்த்தனர். மர உச்சியில் இலைகளின் ஊடாக மறைந்து, பழத்தை ருசித்துக் கொண்டிருந்தது கிளி. காட்டில் நல்ல பாடம் கற்ற மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.குழந்தைகளே... இயற்கையை கவனித்தால் வாழ்வில் நம்பிக்கை வளரும்.முகிலை ராசபாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !