ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (12)
முன்கதை: வளர்ப்பு மிருகங்கள் மீது அன்பு கொண்டிருந்த சிறுவன் மகிழ் ஆர்வத்தை அறிந்து, காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை தத்தெடுத்தார் அவன் தந்தை. எதிர்ப்பை மீறி அடுக்குமாடி குடியிருப்பில் அதை வளர்த்தனர். குடியிருப்பின் எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்த்து, பாதுகாப்பை உறுதி செய்தது செங்கிஸ்கான். பாம்பின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியது. அன்று பக்கத்து குடியிருப்பில் வசித்த பூனையுடன் உக்கிரமாக மோதியது. இனி - இரு மிருக அம்புகள், 'விஷக்' என சீறி சினந்தன. செங்கிஸ்கானின் உடலில் முட்டி மோதியது பூனை.சிதறிய பூனை தடுமாறிய பின் எழுந்தது.திடீரென பாய்ந்து, பூனையை கட்டிப்பிடித்தது செங்கிஸ்கான்.'தம்பி... நலமா... நீயும், நானும் மனிதர்களின் வளர்ப்பு மிருகம்; எனக்கு, நன்றி உணர்ச்சி அதிகம். உனக்கு, அறவே கிடையாது என்பர்...''அண்ணா... நலம் தானே... புது விருந்தாளியாக பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளீர்...''ஆமாம்; நீ எத்தனை ஆண்டுகளாக இங்கு வசிக்கிறாய்...''பக்கத்து, அடுக்குமாடி குடியிருப்பில், ஆறு ஆண்டுகளாக இருக்கேன். எலிகள் தான் எனக்கு பிரதான சாப்பாடு. வீடுகளில் புகுந்து, சமையல் அறைக்குள் இருக்கும் பாலையும் திருடி குடிப்பேன்; மக்கள் திருட்டுப் பூனை என அழைப்பர். எனக்கு, சாப்பாடு நேரடியாக தந்தால் ஏற்க மாட்டேன்; திருடி சாப்பிடுறது தான் கிக்கு. நான் திருட்டு பூனை. நீங்கள் போலீஸ் நாய்; நமக்குள் நட்பு பாராட்டுவது ஒத்து வருமா... நன்றாக சிந்தியுங்கள்...''என்னுடன் நட்பு பாராட்ட வேண்டுமெனில், திருட்டை கைவிடு...''என் பிறவி குணத்தை விட முடியுமா...''எனக்காக, நீ திருடுவதை விட்டு ஒழிக்கலாமே...''சரி... முயற்சி செய்கிறேன்...'செங்கிஸ்கானை நட்புடன் பார்த்தது பூனை.'திருவிழாவில் விற்கும் பஞ்சு மிட்டாய் போல், புஸ்புஸ்ன்னு இருக்கிறாய். நீ பால் வெண்மை. நானோ பழுப்பும், கறுப்பும் கலந்த நிறம்...''நிறத்தில் என்ன இருக்கிறது. ஒரு முக்கியமான விஷயம்...''என்னவென்று கூறு...''பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்புக்குள் ஏகப்பட்ட குற்றங்கள் நடக்கின்றன. நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்...''என்னென்ன குற்றங்கள்...''அப்புறம் சொல்றேன். இப்போ விடை பெறுகிறேன்; அதோ ஒரு பெருச்சாளி...கபக்...ன்னு பிடிச்சுட்டால், இரவு சாப்பாடு முடியும்...''மியாவ்...' என்றபடி ஓடியது பூனை.செங்கிஸ்கானுக்கும், பூனைக்கும் இடையே நிகழ்ந்ததை கண்டு சிரித்த மகிழ், 'உலகில், 47 கோடி வளர்ப்பு நாய்கள் உள்ளன. 22 கோடி வளர்ப்பு பூனைகள் உள்ளன; இவற்றில் ஒரு நாயும், பூனையும் இவ்வளவு நெருக்கமாய் இருப்பதை இதுவரைக்கும், பார்த்ததே இல்லை.' என எண்ணி நெகிழ்ந்தான்.மகிழை பார்த்து, கண் சிமிட்டியது செங்கிங்கான். இருக்கை ஒன்றில், 'சர்க்கஸ்' சிங்கம் போல் அமர்ந்து இருந்தது. அதை சுற்றி சூழ்ந்திருந்தனர் மகிழ் குடும்பத்தினர்.செங்கிஸ்கானின் ரோமத்தை சீப்பால் வாரி விட்டான் மகிழ்.''நீ, எங்கள் வீட்டுக்கு வந்து, ஒரு வாரம் ஆகிறது. காவல்துறையை மறந்து, எங்களுடன் இணைந்து விட்டாய்...''மகிழின் அப்பா மகிழ்வுடன் தெரிவித்தார்.'அது எப்படி... நான், இன்னும் காவல்துறையை நேசிக்கிறேன்... இன்னும் காண்டீபன், என் கண்ணுக்குள்ளே நிற்கிறார். அவரை, ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என மனம் ஏங்குது...'''உன் மனம் நினைப்பது எங்களுக்கு கேட்கிறது; உன்னை பார்க்க, காண்டீபன் வரக் கூடாது என, காவல்துறை தடை போட்டுள்ளது...'''காண்டீபன் எனக்கு குரு, -தந்தை, -நண்பர். எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால், அவருடன் நிரந்தரமாக சென்று விடுவேன்...'''நாங்கள், உனக்கு அமைத்து தரும் ராஜ வாழ்க்கையில், சீக்கிரம் காண்டீபனை மறந்து போவாய்...'''ஆயிரம் வந்தாலும், போனாலும், அவர் மீதான அபிமானம் மாறாது; எங்களுக்கு இடையேயான, அன்பை அளக்க, உலகில் கருவிகள் இல்லை...'''மாற்றம் ஒன்றே மாறாதது...''சிரித்தபடி கூறினான் மகிழ்.-அதே நேரம் காண்டீபன் வீட்டில் -காண்டீபன் மனைவி, ''என்னங்க... செங்கிஸ்கானை பிரிந்ததில் இருந்து, சரி வர சாப்பிடாமல், எடையும் குறைந்து வருகிறீர். அதை மறந்து, வேலையை பாருங்கள்...'' என்றாள்.காண்டீபன் கண்களில், தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்தது. நெஞ்சில், பச்சை குத்தியிருந்த செங்கிஸ்கான் பெயரை வருடி கொடுத்தான். ''என்னால், செங்கிஸ்கானை மறக்க முடியவில்லை. என் குடும்பத்தை விட உசத்தி...''''அதனால் என்ன செய்யப் போகிறீர்...''''செங்கிஸ்கானை கடத்தி சென்று, மனிதர்கள் இல்லாத துார தேசத்தில் வாழப் போகிறேன்...'' என்றான் காண்டீபன்.அதை கேட்டதும், விக்கித்து நின்றார் காண்டீபன் மனைவி.- தொடரும்...- ஆர்னிகா நாசர்