அந்துமணி பா.கே.ப.,
அந்தப் பெண், திருச்சி ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியில், 'ஆர்கிடெக்சர்' படித்து, தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனியில் பணிபுரிகிறார்.அஞ்சு இலக்க சம்பளம்; சொந்தமாக கார்... இத்யாதி இத்யாதி வசதிகள். கெட்டிக்காரப் பெண்!அன்று என்னைக் காண வருவதாகக் கூறி இருந்தார்.பனியன் போல, தலை வழியே போட்டுக் கொள்ளும் வெல்வெட் பிளவுஸ். வழ வழ சேலை... தலை முடியை இழுத்து சீவி, கொண்டை போட்டிருந்தார். மூக்கின் மீது பவர் கிளாஸ்...ஆரவாரமாக வந்தவர், 'மணி சார்... காபி கிடைக்குமா?' எனக் கேட்டபடி அமர்ந்தார். பேச்சு, இந்தியப் பாரம்பரியம், கலாசாரம், ஆயுர்வேதம் என எங்கெங்கோ சென்றது.'மணி சார்... தர்மபால் என்பவர் எழுதிய புத்தகங்கள் படிச்சுருக்கீங்களா... பெரிய காந்தியவாதி; ஆகமதாபாத்தில் வசிக்கிறார். அவர், இந்தியாவின் பெருமை மற்றும் உலக மக்களுக்கு நாம் தான் முன்னோடி என்பது பற்றி, பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.'அடுத்த முறை உங்கள சந்திக்க வரும் போது, அவரது புத்தகங்களை எடுத்துட்டு வர்றேன். நிதானமாக படிச்சுப் பாருங்க...' என, அப்பெண் கூறும் போதே, 'என்னடா இது! மதுரைக்கே சோதனையா... புத்தகமெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கப் போகுது... அதை படிச்சுக் காட்ட ஆள் தேடணுமே...' என நினைத்துக் கொண்டேன்.'மணி சார்... நீங்க எப்படிப்பட்டவர், எலியா, புலியா... மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பவரா அல்லது விட்டுக் கொடுத்துவிட்டு விழிப்பவரா, பெருமைப்படுபவரா... நீங்க, உங்க உரிமையை எந்த அளவுக்குக் காப்பாற்றிக்கிறவர் என்பதை பற்றி, உங்களுக்கு ஒரு, 'குவிஸ்' வைக்கப் போறேன்...' எனக் கூறி, அவர் கேட்ட கேள்விகள்...1. நீங்கள் பஸ்சுக்காகவோ, சினிமாவுக்காகவோ கியூவில் நிற்கிறீர்கள்; உங்களை முந்தியபடி ஒருவர் புகுந்தால்... (அ) சங்கடப்பட்டு பேசாதிருப்பீர்களா?(ஆ) அவருக்கு முன்னாலேயே நீங்கள் நிற்பதை எடுத்துக் கூறுவீர்களா?(இ) அவருடைய செய்கையைப் பற்றி மூன்றாமவரிடம் உரக்க முணு முணுப்பீர்களா?2. உங்கள் நண்பருக்கு, எப்போதோ ஒரு முறை நீங்கள் உதவி செய்தீர்கள். அது தான் சாக்கு என்று அவர் அடிக்கடி உங்களிடம் உதவி எதிர்பார்க்கத் துவங்கினால்... (அ) அவர் கேட்கும் போதெல்லாம் தட்டிக் கழிப்பீர்களா?(ஆ) வேண்டா வெறுப்பாக மீண்டும் உதவி செய்வீர்களா?(இ) அப்பட்டமாக மறுப்பீர்களா?3. நாணயமற்றதென, நீங்கள் கருதும் ஒரு செயலைச் செய்யும்படி, உங்கள் முதலாளி சொல்கிறார். அப்போது... (அ) அந்தக் காரியத்தைச் செய்யாமல் முடிந்தவரை தள்ளிப் போடுவீர்களா?(ஆ)'முதலாளியின் பொறுப்பு; நமக்கென்ன...' என்று அவர் கூறியபடி செய்வீர்களா?(இ) 'முடியாது!' என மறுத்து, ஏன் என்பதையும் விளக்குவீர்களா?4. ஒரு பொருள் வாங்க கடையில் நுழைகிறீர்கள்..., சிப்பந்தி உங்களைக் கவனியாமலிருந்தால்...(அ) உங்களை அவர் கவனித்து விசாரிக்க வரும் வரை காத்திருப்பீர்களா?(ஆ) இனிமையாக அவரை கூப்பிடுவீர்களா?(இ) வேறு கடையை நாடிப் போவீர்களா?5. சாயம் போகாது என்ற உத்திரவாதத்துடன் கொடுக்கப்பட்ட துணி, சலவையில் வெளுத்துப் போய் வந்தால்...(அ) அதைக் கொடுத்த துணிக்கடைக்கு எடுத்துப் போவீர்களா?(ஆ) தூக்கி எறிந்து விடுவீர்களா?(இ) நண்பர்களிடம் முணு முணுத்துவிட்டு ஏதாவது பத்திரிகைக்கு புகார் கடிதம் எழுதிப் போடுவீர்களா?6. உங்களுக்குப் பிடித்தமான ஓர் ஆடையைப் பற்றி நண்பர்கள் கேலி செய்தால்... (அ) அதை அணிந்து கொள்வதை விட்டு விடுவீர்களா?(ஆ) கிண்டலைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து அணிந்து கொள்வீர்களா?(இ) கேலி செய்பவர்களிடமிருந்து ஒதுங்கி, வேறு நண்பர்களைப் பிடிப்பீர்களா?7.உங்களுடைய விலையுயர்ந்த பொருளை, 'ஓசி' வாங்கிச் சென்றவர், அதைக் கெடுத்து குட்டிச் சுவராக்கித் திரும்பக் கொடுத்தால்... (அ) ரிப்பேர் செலவைத் தரும்படி, இரவல் பெற்றுச் சென்றவரைக் கேட்பீர்களா?(ஆ) ஒன்றும் கேட்காமல் புழுங்குவீர்களா?(இ) நீங்களே ரிப்பேர் செய்து, இனி எவருக்கும், எதுவும் இரவல் தருவதில்லை என்று தீர்மானிப்பீர்களா?8. நீங்கள் விடுமுறை நாட்களில், வெளியூருக்கு உங்கள் குடும்பத்தை அழைத்துச் செல்வது... (அ) எப்போதாவதா?(ஆ) ஒவ்வோர் ஆண்டுமா?(இ) எப்போதுமே கிடையாதா?9. உங்களுடைய அருமை நண்பர் ஒருவரை உங்கள் மனைவிக்கு (அல்லது கணவருக்கு) பிடிக்கவில்லை என்றால்...(அ) நண்பரது நட்பை விட்டு விடுவீர்களா?(ஆ) ரகசியமாக அவருடன் நட்பு வைத்துக் கொள்வீர்களா?(இ) மனைவியிடம் (அல்லது கணவரிடம்) அவருடைய அர்த்தமில்லாத பிடிவாதத்துக்காக ஒரு நண்பரை இழக்கத் தயாராயில்லை என்று சொல்லி விடுவீர்களா?10. ரயிலில் இடம் தேடி ஓடிக் கொண்டிருக்கையில், ரிசர்வ் செய்யாத பெஞ்சில் ஒருவர் படுக்கை விரித்திருப்பதைப் பார்க்கிறீர்கள். உடனே... (அ) ரயில்வே அதிகாரியை வரவழைத்து இதைச் சுட்டிக் காட்டுவீர்களா?(ஆ) யாராவது ரயில்வே அதிகாரி வந்து கவனிக்கட்டும் என்று காத்திருப்பீர்களா?(இ) நீங்களே படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டு உட்காருவீர்களா?மேற்கண்ட, 10 கேள்விகளையும் அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, என் கருத்தை, தனியே ஒரு காகிதத்தில் குறித்து வந்தேன்.'என்ன மணி சார்... குறிச்சு முடிச்சிட்டீங்களா... இந்த தேர்வுக்கு மொத்தம், 100 மார்க்! ஒவ்வொன்றுக்கும், 10 மார்க். 'ஆம்' போட வேண்டிய விடைகள்:1க்கு - ஆ 2க்கு - இ3க்கு - இ 4க்கு - ஆ 5க்கு - அ 6க்கு - ஆ 7க்கு - அ 8க்கு - அ 9க்கு - இ 10க்கு - அ'எத்தனைக்கு 10க்கு, 10 வாங்கினீங்க, சொல்லுங்க...' என்றார்.'நான் சொல்றது இருக்கட்டும்... எத்தனை மதிப்பெண்ணுக்கு என்னென்ன கணிப்புன்னு சொல்லுங்க...' என்றேன்.'நீங்கள் எடுத்த மார்க், 70 முதல் 100 ஆக இருந்தால், நீங்கள் சுதந்திர மனிதர். நேர்மையற்ற எவரும் உங்களிடமிருந்து தப்ப முடியாது.'அதுவே, 40 முதல் 60 ஆக இருந்தால்; நீங்கள் வம்பு, தும்புக்கு போகாத மனிதர். உங்கள் உரிமையை நிலை நாட்டிக் கொள்ள சிறிது அஞ்சுபவர்.'உங்க மதிப்பெண், 30க்கு கீழே இருந்தா, நீங்கள் மிகவும் அடங்கி, ஒடுங்கிப் போகிற ஆசாமி. எல்லாரும் உங்களை நசுக்குகின்றனர். ஆனால், கலங்காதீங்க... அடுத்தடுத்துச் சீண்டினால் புழு கூட முறைக்குமே! உங்க மார்க் என்ன... சொல்லுங்க...' என்றார்!- நான் எடுத்த மதிப்பெண்ணை ஏன் சொல்லுகிறேன்... அப்போ, நீங்க எவ்வளவு மார்க் எடுத்தீங்க?