அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள தோழிக்கு —நான் ஒரு டீச்சர். நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பெற்றோரால் சீரிய முறையில் வளர்க்கப்பட்டவள். ஒரு நல்ல குடும்பத்தில், நல்லவர் என, என் பெற்றோர் பார்த்து முடிவு செய்தவருக்கு வாழ்க்கைப்பட்டு, இன்று நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அபலை நான்.பிள்ளைகள் கல்லூரி பயிலும் வயதில் இருக்கின்றனர். நான் நல்ல பர்சனாலிட்டி உடையவள். யாரும் 35 வயதிற்கு மேல் மதிக்க மாட்டார்கள். இன்னும் நரை கூட தோன்றவில்லை; அப்படி ஒரு தோற்றம்.சிறந்த முறையில் குடும்பத்தை, கணவனை, குழந்தைகளைப் பேணி, இப்படி ஒரு மனைவி யாருக்கு வாய்க்கும் என, உடன் பணியாற்றுபவர்கள், உறவுகள், நண்பர்கள் என, எல்லாராலும் பாராட்டுப் பெற்று வருபவள்.சமையல் எக்ஸ்பர்ட்; கலைகளில் நாட்டம் அதிகம்; தையல், பாட்டு, பின்னல், வீட்டு அலங்காரம் என, எல்லாவற்றிலுமே தனி முத்திரை பதிப்பவள்...சரி பிரச்னைக்கு வருகிறேன்...என் கணவர் எல்லாவற்றிலும் எதிர்மறையான குணம் கொண்டவர். மனிதர்களாகிய நாம், நம்மில் அனேகர் அழகை ஆராதிக்கிறோம். ஆனால், இவரோ அசிங்கத்தை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுபவர். இவரது அபூர்வமான குணத்தால் அடியோடு ஆடிப்போய் இருக்கிறேன்.இவர் உறவினரிடையே நல்ல பேர் பெற்றிருக்கிறார். காரணம், இவரால் நான் அனுபவிக்கும் கொடுமையை பிறரிடம் சொல்லாமல் மூடி மறைத்ததுதான். ஏனென்றால், இது வெளியில் பெற்ற தாயிடம் கூட சொல்ல முடியாத அவலம்.ஆரம்ப காலங்களில் என் சகோதரிகளின் திருமணம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற கவலையாலும், தற்போது வளர்ந்து விட்ட பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தாலும் வாயிருந்தும் ஊமையாய், நடைபிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.கொஞ்சம் கூட ரசனையே இல்லாதவர்; முரட்டுத்தனமும், மூர்க்கப் புத்தியும் கொண்ட அறிவீலி; படு கோபக்காரர். படுக்கையறையில் கூட மூர்க்கத்தனத்தை காட்டுபவர். என் அழகை அடுத்தவர்களுக்கு காட்சி பொருளாக ஆக்க நினைப்பவர். எங்கள் வீட்டிற்கு வரும் பிற ஆடவர் எதிரில் நான் அரைகுறை ஆடையுடன் அல்லது ஆடையே இல்லாமல் போஸ் கொடுக்க வேண்டும். அவன் பால்காரனாக, டோபியாக, பூக்காரனாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நான் இதுவரை போராடி, சமாளித்து வருகிறேன். மறுத்தால் வீட்டில் என்னோடு தாறுமாறாக சண்டை போடுவார். பிள்ளைகள், இவர்கள் ஏன் இப்படி சண்டை போடுகின்றனர் என்று தெரியாமல் விழிப்பர். அவர்களுக்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாத நிலையில் நான். காரணம் தெரிந்தால், 'உனக்கு இப்படிப்பட்ட கணவன் தேவையா?' என்று கேட்கக் கூடும் அல்லது தன் தந்தையை வெறுத்து ஒதுக்கக் கூடும். என் மதக் கோட்பாடுகளும், பெற்றோரால் வளர்க்கப்பட்ட சூழலும் இன்று சமூகத்தில் எனக்கு இருக்கும் நல்ல மதிப்பும்தான் என்னை ஊமையாக்கி, சிரித்த முகமாய் மனதின் ரணங்களை துளி கூட வெளியில் காட்டாமல், வாழ்ந்து வரச் செய்கின்றன.ஒரு குடிகாரனை, ஸ்ரீலோலனை, பொறுக்கியை, ரேஸ் பைத்தியத்தை, சூதாட்டக்காரனை சமுதாயத்திற்கு அடை யாளம் காட்டி, நியாயம் கோர முடியும். ஆனால், என் நிலையை நான் எப்படி வெளியே கூற முடியும்? எனக்கு தகுந்த பதில் அளிப்பாயா?உன்னுடைய பதில் என் கணவரை திருத்த வேண்டும். எனக்கு உதவுவாயா? இப்போது சமீப காலமாக நான் சம்மதிக்காததால், பிற பெண்களோடு தொடர்பு கொண்டு, சம்பளப் பணம் முழுமையும் ஊதாரித்தனமாக செலவழித்து, என்னை கடன் தொல்லைக்கு ஆளாக்கியிருக்கிறார். உன் பதில்தான், என் குடும்பத்தில் ஒளி ஏற்ற வேண்டும். கை நிறைய சம்பாதித்தும், வாழ்க்கையில் இதுவரை எந்த சுகத்தையும் நான் அனுபவிக்கவில்லை. நான் சுமங்கலி கோலம் கொண்ட ஒரு துறவி. புரிகிறதா? நல்லதொரு பதிலை எதிர்பார்க்கிறேன்.— இப்படிக்கு, ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி.அன்பு சினேகிதி —உன் கடிதம் கண்டேன். உன்னைப் பற்றி நீயே எழுதியிருக்கும் சுய விமர்சனம் கண்டு புன்னகைத்தேன். 50 வயசுக்கும், 35 வயது இளமையும், சுறுசுறுப்பும், கலைகளில் தேர்ச்சியும் அத்தனை சுலபத்தில் ஒருவருக்கே அமையப் பெற்றிருக்கிறது என்றால், ஆண்டவனின் அருள் உனக்கு பரிபூரணமாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்.உன் கணவரை பற்றி நீ எழுதியிருந்ததில் இருந்து ஒன்று தெளிவாக புரிகிறது. ஏதோ ஒரு காரணத்தால் அவருக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம். உன் இளமையும், அழகும். மற்றவர் உன்னிடம் வைத்திருக்கும் மதிப்புமே என்று கூட சொல்லலாம். எப்படி நீ, உன்னுடைய அழகுக்கும், புத்திசாலித்தனத்துக்கும் அவர் சற்றும் பொருத்தமில்லை என்று நினைக்கிறாயோ அப்படியே அவரும் நினைக்கலாம்.அவருக்குள், 'இவளுக்கு ஏற்ற புருஷன் நான் இல்லை, என்கிற உறுத்தல் நிறைய இருக்கிறது. அதே சமயம், தன்னுடைய தகுதிக்கு மேல் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு ஒரு பெண் கிடைத்ததில் கர்வமும், அசட்டுப் பிடிவாதமும் சேர்ந்து இருக்கிறது.நீ ஆசிரியை என்பதால் இப்படி சொன்னால் புரியும் என, நினைக்கிறேன்...அதிகம் படிக்காத, எப்போதும் ஒற்றைப்படையில் மதிப்பெண் வாங்கும் சிறுவன் ஒருநாள் பக்கத்து சிறுவனைப் பார்த்து காப்பி அடித்தோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ நல்ல மதிப்பெண் வாங்கினாலோ தன் மதிப்பெண் தெரியும்படியாக சிலேட்டை தூக்கி பிடித்து நடப்பான். அதுவும் படிக்கிற புத்திசாலி குழந்தைகள் பக்கம் போக மாட்டான். அவர்களுக்கு இவன் சங்கதி தெரியும்... ஆகவே, தன்னை விடவும் படிக்காத, அசட்டுக் குழந்தைகளிடையே தான் இவனது அலட்டலும், விரட்டலும் இருக்கும்.இப்போது புரிகிறதா... உன் அழகும், இளமையும், வாய்க்கு ருசியாய் சமைக்கும் நேர்த்தியும் உன் கணவரின் தாம்பத்யம் என்கிற சிலேட்டில் தவறி விழுந்துள்ள அதிக பட்ச மதிப்பெண். அந்த பெருமையை தன் தகுதியை விடவும் குறைவான தகுதி உடையவர்களிடம், 'எக்சிபிட்' செய்து கொள்வதில் அவருக்கு ஒரு திருப்தி. அதே சமயம் இத்தனை மென்மையான பெண்ணை இதுபோல் இம்சிப்பதில் ஒரு சுகம்; இப்படி சுகம் கண்ட ஆண்களுக்கு, தாம்பத்ய சுகம் கூட இரண்டாம் பட்சம் தான். நீ செய்ய வேண்டியது...அவரை விடவும் நீ ஏதாவது ஒரு விதத்தில் உன்னை தாழ்த்திக் கொள்ளப் பார். அவரது வயதுக்கு ஏற்றபடி உருவத்திற்கு ஏற்றபடி அலங்காரம் அல்லது நடை, உடை பாவனை. இது மிகவும் கஷ்டம் தான். ஆனால், பிரச்னையை சமாளிக்க இது சரியானபடி உதவும். அடிக்கடி அவர் காதுபட உனக்கு வயசாவதை சொல்லி இடுப்பு, முதுகு வலிக்கிறது என்று சும்மாவாவதும் புலம்பு; தராசுத்தட்டு சமமாகும் வரை. முதலாவது சரிப்பட்டு வராது என்று தோன்றினால், உன் கணவரிடம் இப்படி கேள்... 'கண்டவன் முன்னால் அரைகுறையாக போஸ் கொடுக்கச் சொல்கிறீர்களே... நான் மட்டும் போஸ் கொடுத்தால் போதுமா அல்லது உங்கள் அம்மா, அக்கா, தங்கச்சி இவர்களையும் கூப்பிடட்டுமா? என்று. மனிதர் அரண்டு போவார் பிறகு, நிதானமாக, 'இப்படி ஒரு வக்ரம் உங்களுக்கு இருக்கும் என்பது நமது பிள்ளைகளுக்கு தெரிய வந்தால், ஆயுசுக்கும் அவர்கள் தங்களது பொண்டாட்டி, குழந்தைகளோடு உங்கள் முகத்தில் விழிக்காமல் எங்கயாவது ஓடி விடுவர். அப்புறம் செத்தால் கூட திரும்பிப் பார்க்க மாட்டார்கள்...!' என்று சொல்.உன் கடிதத்திலிருந்து உனக்கு திருமணம் ஆனதிலிருந்தே, நாம் எங்கேயோ எப்படியோ இருந்திருக்க வேண்டியவள். நம்மை கொண்டு வந்து கிணற்றில் தள்ளி விட்டனரே என்கிற நினைப்பு இருந்திருக்கிறது எனத் தெரிகிறது. உன்னிடம் என்ன இல்லையென்று அவர் பிற பெண்ணை நாடிப் போகிறார் என்று யோசி. முடிந்தால் உன் கணவனை, முரட்டு குணம் கொண்ட உன் மூன்றாவது பிள்ளையாக நினைத்துப் பழகி பாரேன்.உனக்கே இப்போது 50 வயது நெருங்கிக் கொண்டிருப்பதாக எழுதியிருக்கிறாய். உன் கணவருக்கு 53 அல்லது 55 இருக்கலாம். இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். மனதில் கஷ்டம் தோன்றும் போதெல்லாம் நீ சார்ந்துள்ள மதத்தின் வேத புத்தகத்தில் உள்ள 91ம் சங்கீதத்தை உன் இல்லம் எங்கும் ஒலிக்கும் படியாக பாடு... இது ஆறுதல் மட்டும் அல்ல; நம்பிக்கையையும், சக்தியையும் அளிக்கக் கூடியது.உனக்காக நானும் இதே 91ம் சங்கீதத்தை வாசிக்கிறேன்.— இப்படிக்கு உன் அன்பு தோழிசகுந்தலா கோபிநாத்.