அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மா,நான் தனியார் பள்ளியில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியை. திருமணமாகி, ஆறே மாதத்தில் விவாகரத்து பெற்றவள். என் பள்ளியில் பணி புரியும் திருமணமாகாத ஆசிரியர் ஒருவரின் குணநலன்களால் ஈர்க்கப்பட்டு, அவரை காதலிக்க ஆரம்பித்தேன். அவர், என்னைவிட மூன்று வயது இளையவர். எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் நிறைய பணம் செலவழித்துள்ளார். கடந்த, ஒன்பது ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வருகிறோம்; பலமுறை உறவும் வைத்துள்ளோம்.இந்நிலையில், அவர் வீட்டில், அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய ஆரம்பித்தனர். அதனால், அவர், என் வீட்டிற்கு வந்து, என்னை பெண் கேட்டார். கூடவே, 30 சவரன் நகை போட வேண்டும் என்றும் கூறினார்.என் தந்தையோ, வேலைவெட்டிக்கு போகாத, மதுவுக்கு அடிமையானவர். அம்மா, சத்துணவு கூடத்தில், குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார். இரண்டு தங்கைகளும் உள்ளனர். என் குடும்பத்துக்கு என் சம்பளம் தான் பெரிய ஆதரவு. நிலைமை இப்படியிருக்க, என் வீட்டில் இத்திருமணத்துக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.என் காதலர், அவரது வீட்டில் எங்கள் விஷயத்தை கூறியுள்ளார். வயது மற்றும் ஜாதியை காரணம் சொல்லி, திருமணத்துக்கு மறுத்து, வேறு பெண்ணைப் பார்த்து, திருமணம் செய்து வைத்துவிட்டனர்.தற்சமயம், என் பெற்றோர், எனக்கு மாப்பிள்ளை பார்த்து, நிச்சயம் செய்துள்ளனர். என் காதலரோ, நாங்கள் நெருக்கமாக இருந்ததை எல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளார். எனக்கு திருமணம் நிச்சயமானதைக் கூறி, அந்த வீடியோ பதிவை திருப்பிக் கேட்டேன். ஆனால், அவரோ, 'என்னால், உன் வாழ்வில் எந்த பிரச்னையும் வராது; நம் காதலின் நினைவாக இருப்பது இதுமட்டும்தான்...' என்று கூறி, அதை கொடுக்க மறுக்கிறார். வற்புறுத்தி கேட்ட போது, 'உன் பெற்றோரால் தான் நாம் ஒன்று சேர முடியவில்லை; அதனால், தற்போது என் திருமண வாழ்வும் சந்தோஷமாக இல்லை. இப்போது, உன்னுடன் பேசவும் தடை விதிக்கின்றனர். நீயும், உன் குடும்பமும்தான் என் தற்கொலைக்கு காரணம் என்று எழுதி வைத்து செத்து விடுவேன்...' என்று மிரட்டுகிறார்.அம்மா, இப்போது நான் என்ன செய்வது? திருமணம் செய்து கொள்வதா, திருமணத்திற்கு பிறகு அந்த வீடியோவை காட்டி, என்னை, 'பிளாக் மெயில்' செய்தால் என்ன செய்வது? தற்கொலை செய்து கொள்ளலாம் போலிருக்கிறது. எனக்கு நல்வழி காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.— இப்படிக்கு கண்ணீருடன்உங்கள் மகள்.விரக்தியின் விளம்பில் நிற்கும் மகளுக்கு,விவாகரத்தான நீ, ஒன்பது ஆண்டுகளாக உன்னை விட மூன்று வயது இளையவரை காதலித்து வருகிறாய். உன்னை திருமணம் செய்து கொள்ள, உன் வீட்டாரிடம் உன் காதலன், 30 சவரன் நகை கேட்டது கொடுமை. இதற்கு, நீயும் கூட்டுக்கையாக இருந்திருக்கிறாய். உங்களது திருமணத்திற்கு சம்மதிக்கும் மனநிலையில் உள்ள பெற்றோரை, உங்களுக்கு எதிராக நிலைநிறுத்தி உள்ளீர்கள்.உன்னை காதலிக்கும் போது நீ விவாகரத்து ஆனவள், மூன்று வயது மூத்தவள், வேறு ஜாதியை சேர்ந்தவள் என்பதெல்லாம் உன் காதலனுக்கு தெரியாதா? உன்னை திருமணம் செய்ய, உண்மையில் உன் காதலன் விரும்பியிருந்தால், தன் வீட்டை எதிர்த்து, உன்னை பதிவு திருமணம் செய்திருப்பானே... ஏன் செய்யவில்லை கண்ணம்மா?உன் காதலனுக்கு, உன் உடல் தான் முக்கியம்; அவனுடைய சுயநலத்திற்கு, அவன் திருமணம் செய்து கொள்வான். ஆனால், நீயோ மறுமணம் புரிந்து கொள்ளாது, அவன் கேட்கும் போதெல்லாம் அவனுக்கு உடல் சுகம் அளிக்க வேண்டும் என நினைக்கிறான். வக்கிர புத்தி கொண்ட அந்த சதிகாரன், உங்களின் ஒன்பது ஆண்டு நெருக்கமான உறவுகளை வீடியோ எடுத்து, உனக்கு எதிராக பயன்படுத்த காத்திருக்கிறான்.உன் பெற்றோரால் தான் உங்கள் திருமணம் நடக்கவில்லை. அதனால், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுவது, எமோஷனல் பிளாக்மெயில். உன் மறுமணத்திற்கு பின், உன்னிடம் வீடியோவை காட்டி காட்டி, மிரட்டி, உறவு வைத்துக் கொள்வான். அதனால், முன்னெச்சரிக்கையாக செயல்படு. அவன் அந்த வீடியோ பதிவை கொடுக்காவிட்டால், உங்கள் இருவருக்குமான உறவை, அவனது மனைவியிடம் சொல்லி விடுவேன் என மிரட்டு. அதற்கும் அவன் மசியாவிட்டால், காவல்துறையில் புகார் செய்வேன் எனக் கூறு. ஒத்துவராவிட்டால், மெய்யாலுமே அவன் மீது புகார் செய். காவல்துறையில் உன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் விசாரிக்க வேண்டு. உன் காதலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, வீடியோ பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் வரை, மறுமணத்திற்கு அவசரப்படாதே.'கர்மம் செய்யாமல் விடுவதைக் காட்டிலும், கர்மம் செய்வது மேல்' என்றும், 'பரமாத்மாவை அடைந்து விட்ட ஞானிக்கு, பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும், தூங்கி எழுந்தவன், கனவில் கண்டது போலாகி விடும். அதானாலேயே, அவனுக்கு உலகியல் பொருள் எதிலும் சிறிதும் விருப்பம் இருக்காது...' என்று கூறுகிறது பகவத் கீதை. அதனால், தற்கொலை எண்ணத்தை கை விட்டு, ஆசிரியை பணியை முழுமையாக செய்து பரமாத்மாவை அடைந்து விட்ட ஞானியின் மனநிலை பெறு.உடல் சுகத்தை தாண்டி, உலக வாழ்வில், ஆழமான அர்த்தம் நிறைந்த ஒரு வாழ்வும் இருக்கிறது. திருமண உறவிலும், உடல்களுக்கு அப்பால், மனங்களின் சங்கமமே உன்னதமாக போற்றப்படுகிறது. உன் மறுமணம் குறுகிய நோக்கங்களுக்குள் சிக்கி விடாமல், பெரிய வெற்றி அடைய வேண்டும். உனக்கு பொருத்தமாய் துணை கிடைக்கும் வரை, ஒற்றைக்கால் கொக்கு போல காத்திரு. உன் கடந்த காலம் தெரிந்து, உன்னை ஏற்றுக் கொள்கிறவன் கிடைத்தால் உத்தமம். திருமணத்திற்கு பின் குழந்தைகளை பெற்று தாய்மையை அனுபவி. உன் ஒன்பது ஆண்டு பாவங்களுக்கு பிராயச்சித்தமாக முதியோர் இல்லம் மற்றும் அனாதை இல்லங்களுக்கு தானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள். பெற்றோரை குறை கூறாமல் அன்பாய், ஆதரவாய் பராமரி. உன் வெற்றிகரமான மறுமணத்திற்கு வாழ்த்துகள்.— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.