துவரை சாகுபடியில் நாற்று நடவு - சின்னச்சின்ன செய்திகள்
தென்னை நார்க்கழிவு நிரப்பப்பட்ட குழித்தட்டுகளில் துவரையை விதைத்து சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையில் நிழலில் வைத்து பராமரிக்க வேண்டும். தினமும் பூவாளிகொண்டு தண்ணீர் தெளித்துவந்தால் நாற்று முளைக்கத் தொடங்கும். குழித் தட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ஷீட்களிலும், தென்னை நார்க் கழிவைக்கொட்டி, நாற்று உற்பத்தி செய்யலாம். குழித்தட்டு நாற்றுக்களை 15 நாட்களில் நடவு செய்துவிட வேண்டும். பிளாஸ்டிக் ஷீட்டில் வளர்ந்த நாற்றுக்களை 25 நாட்கள் வரை வைத்திருந்து நடலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய ஒரு கிலோ விதை போதுமானது. வழக்கமான விதைப்பு முறையில் ஏக்கருக்கு 3 கிலோ முதல் 5 கிலோ வரை தேவைப்படும்.மானாவாரி விவசாயிகள் நாற்றங்கால் உற்பத்தியை ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம். ஆகஸ்ட் மாதம் 2ம் வாரம் விதை போட்டால் செப்டம்பர் முதல் வாரம் நடவுப் பணியைத் தொடங்கலாம். அப்போது மழைக்காலம் என்பதால் நிலத்தில் உள்ள ஈரத்திலேயே நடவு செய்துவிடலாம்.நாற்று உற்பத்தி தொடங்கும்போதே வயல் தயாரிப்பு பணிகளை தொடங்கிவிட வேண்டும். தொழு உரம் இட்டு நிலத்தை இரண்டு உழவு செய்ய வேண்டும். பிறகு 5 கொக்கிகள் உள்ள கலப்பையில் நடுவில் உள்ள 3 கொக்கிகளையும் கழற்றிவிட்டு ஓட்டினால் 5 அடி இடைவெளியில் பார் மாதிரியான கரைகள் உருவாகிவிடும். பாரின் ஒரு பக்கத்தில் 3 அடி இடைவெளியில் ஒவ்வொரு நாற்றாக நடவு செய்ய வேண்டும். இப்படி பாரின் ஒரு ஓரத்தில் மட்டும் நடவு செய்வதால் பள்ளத்தில் தேங்கும் மழைநீரே நாற்று வளர போதுமானதாக இருக்கும்.நடவு செய்த 25ம் நாள் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். அப்போது செடியின் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் அதிகக் கிளைகள் உருவாகும். இது தவிர வேறு பராமரிப்பு தேவைப்படாது. துவரையில் எந்நோயும் தாக்குவதில்லை. சில நேரங்களில் பூச்சி தாக்குதல் இருக்கலாம். 250 மிலி என்.பி. வைரஸ் கரைசலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலமாக தெளித்து உயிரியல் முறையிலேயே பூச்சிகளைக் கட்டுப்படுத்திவிடலாம்.அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக மழை கிடைக்கும். அதைக்கொண்டே செடிகள் செழிப்பாக வளர்ந்துவிடும். பூக்கும் நேரத்தில் மழை முடிந்துவிடுவதால் இயற்கையாகவே நல்ல சூழல் கிடைத்துவிடும். பின் இயற்கையாகவே கிடைக்கும்பனி மற்றும் நிலத்தில் உள்ள ஈரப்பதம் ஆகியவையே அறவடை வரை செடிகளுக்கு போதுமானதாக இருக்கும். வழக்கமாக விதைக்கும் துவரையின் தண்டு பருமனாக இருப்பதால் அறுவடையின்போது அதை வெட்டித்தான் எடுப்பார்கள். ஆனால் கோ.ஆர்.ஜி.7 ரகத்தில் அந்த கஷ்டம் இருக்காது. இதன் தண்டு மெல்லியதாக இருக்கும். அதோடு இந்த ரகம் அதிக உயரம் போகாமல் படர்ந்து வளரும் தன்மை கொண்டது.அறுவடை செய்த துவரையைக் காயவைத்து தட்டி காயைப் பிரித்துக் கொள்ளலாம். நாற்று நடவு முறையில் ஏக்கருக்கு சராசரியாக 750 கிலோ முதல் ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். வழக்கமான துவரையில் அதிகபட்சம் 400கிலோ மாதம்தான் கிடைக்கும்.இறவை முறையில் சாகுபடி செய்யும்போது நாற்று நடவு முறையில் ஏக்கருக்கு 1500 கிலோ வரை கூட மகசூல் எடுக்கலாம். அதிக பராமரிப்பும் இடுபொருட்களும் தேவைப்படாத கோ.ஆர்.ஜி.7 ரகத்தை பச்சைக்காயாக அறுவடை செய்தும் விற்பனை செய்யலாம். 90 நாள் முதல் 150 நாட்கள் வரையிலான பச்சைக்காய்களை அறுவடை செய்வதன் மூலமாக ஒரு ஏக்கரில் 4 டன் முதல் 6 டன் வரை காய்கள் கிடைக்கும். இதை கிலோ 10 ரூபாய் என்ற விலையில் ஓசூர், பெங்களூரு மார்க்கெட்களில் சந்தைப்படுத்தலாம். உள்ளூரிலும் தேவைக்கேற்ப விற்பனை செய்யலாம்.காய் முற்றியபிறகு பறித்து பருப்பாக மாற்றி விற்கிறபோது ஒரு கிலோ துவரைக்கு 50 ரூபாய் வரை கிடைக்கிறது. தொடர்புக்கு: வேளாண் உதவி இயக்குனர் ரவிபாரதி - 94425 42894 மற்றும் சாவித்திரி - 90472 88744. கோம்பைப்பகுதியைச் சேர்ந்த அனுபவ விவசாயி ரங்கமணி - 98430 62942. -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்