கூடுதல் வருவாய்க்கு நாமக்கல் காடை வளர்ப்பு
நாமக்கல் ரக காடைகளை பண்ணை அமைத்து பராமரிக்கும்போது, காடை வளர்ப்பில் நல்ல வருவாய் ஈட்ட முடியும் என, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் கோழி இன ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, நாமக்கலரக காடை. இறைச்சிக்கு கண்டுபிடிக்கப்பட்ட தனி ரகமாகும்.காடை பண்ணை அமைக்க விரும்பும் விவசாயி ஒருவர், ஒரு நாள் காடை குஞ்சுகளில் இருந்து வளர்க்க துவங்கலாம். தீவனம் மற்றும் நோய் தடுப்பு முறையாக கையாண்டால், நான்கு வாரத்தில், 210 கிராம் உடல் எடையுடன் கூடிய காடை கிடைக்கும்.குறிப்பாக, காடை பண்ணையாளர்கள், முட்டை போடும் காடைகள் மற்றும் இறைச்சி காடைகள் என, இரு விதமான காடைகளை வளர்க்க வேண்டும். அப்போது, தான் காடை பண்ணை விரிவுபடுத்துவதற்கு சவுகரியமாக இருக்கும்.உதாரணமாக, காடை முட்டை பொறிப்பான் இருந்தால், காடை பண்ணையில் சேகரிக்கப்பட்ட முட்டைகளை எளிதாக பொறிக்க உதவும். இது, காடை உற்பத்திக்கு கூடுதல் வழி வகுக்கும்.அதேபோல, தீவனம் அரைக்கும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் காடை வளர்ச்சிக்கு ஏற்ப தீவனங்களை அரைத்துக் கொடுக்க முடியும். இது போல காடைகளை பண்ணை அமைத்து பாராமரிக்கும் போது, காடை வளர்ப்பில் நல்ல வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:- முனைவர் கே.பிரேமவல்லி,97907 53594.