உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வெளிவட்ட சாலை பணிகள்: ரூ.26,000 கோடி ஒதுக்கீடு

வெளிவட்ட சாலை பணிகள்: ரூ.26,000 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு: பெங்களூரில் வெளிவட்ட சாலைப் பணிக்காக 26,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.மேல்சபையில் காங்கிரஸ் உறுப்பினர் சுதம் தாஸ் எழுப்பிய கேள்விக்கு, துணை முதல்வர் சிவகுமார் அளித்த பதில்:பெங்களூரில் நிலவும் பிரச்னை, மக்கள்தொகை பெருக்கம் குறித்து கவலை தெரிவித்த, சுதம் தாஸுக்கு என் பாராட்டு. பெங்களூரு, டில்லி போன்று திட்டமிடப்பட்ட நகரம் அல்ல. மல்லேஸ்வரம், ஜெயநகர், இந்திராநகர் போன்ற சில குடியிருப்பு பகுதிகள் மட்டுமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டன.நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2006ல் வெளிவட்ட சாலை தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. அப்போது பணி நடந்து இருந்தால், 2,000 கோடி முதல் 3,000 கோடி ரூபாய்க்குள் பணி முடிந்து இருக்கும்.இப்போது 26,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது; நிதி ஒதுக்கி உள்ளோம். பெங்களூரு வணிக பாதையின் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறோம்.போக்குவரத்து பிரச்னையை தீர்க்க, என்னென்ன வழிகள் உள்ளன என்பது பற்றி யோசித்து வருகிறோம். பெங்களூரு நகர மேம்பாட்டுத்துறை அமைச்சராக ஜார்ஜ் இருந்தபோது, சிக்னல் இல்லாத உயர்த்தப்பட்ட வழித்தடம் கொண்டு வரப்பட்டது. சாக்கடை கால்வாயையொட்டி உள்ள பகுதிகளில் புதிய சாலை அமைக்கப்படும். இதற்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.நகரில் 1,682 கி.மீ., துார சாலைகளில், 'ஒயிட் டாப்பிங்' பணிகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம் சாலைகள் 30 ஆண்டுகள் தரமாக இருக்கும். இந்த திட்டத்திற்கு 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மழைநீர் வடிகால் அமைப்புக்காக உலக வங்கியிடம் இருந்து 2,000 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. மொத்தம் 850 கி.மீ., நீள மழைநீர் வடிகால் 480 கி.மீ., துார பணிகள் முடிந்துவிட்டன. மேலும் 175 கி.மீ., துார பணிகள் நடக்கின்றன.சுரங்கப்பாதை, ஈரடுக்கு சாலை, உயர்த்தப்பட்ட பாதைகள் மூலம், போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண்போம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை