உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அங்கோலா நகராட்சி கவுன்சிலர்கள் 19 பேர் ராஜினாமா எச்சரிக்கை

அங்கோலா நகராட்சி கவுன்சிலர்கள் 19 பேர் ராஜினாமா எச்சரிக்கை

உத்தர கன்னடா: நகராட்சியின் முன்னாள் ஆணையர், மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டால், அங்கோலா நகராட்சியின் 19 கவுன்சிலர்களும் கூட்டாக ராஜினாமா செய்வோமென முதல்வருக்கு எச்சரிக்கை கடிதம் எழுதி உள்ளனர். உத்தர கன்னடா மாவட்டம், கார்வார் பகுதியில் உள்ளது அங்கோலா நகராட்சி. இந்த நகராட்சி ஆணையராக அக் ஷதா, இளநிலை பொறியாளராக ஷால்யா நாயக் ஆகியோர் பணிபுரிந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக, கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர். இதுதொடர்பாக, கலெக்டர் லட்சுமி பிரியா, திட்டமிடல் துறை, நகராட்சி நிர்வாகத்திடம் கவுன்சிலர்கள் முறையிட்டனர். விசாரணையில், இரண்டு அதிகாரிகளும் முறைகேடுகளில் ஈடுபட்டதால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து இரண்டு அதிகாரிகளும் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இந்நிலையில், நேற்று நகராட்சியின் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த 19 கவுன்சிலர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை மாவட்ட கலெக்டர், முதல்வர், துணை முதல்வருக்கு அனுப்பி உள்ளனர். கடிதத்தில், 'முன்னாள் ஆணையர் அக் ஷதா, மீண்டும் அங்கோலா நகராட்சியின் பொறுப்பில் நியமிக்கப்பட்டால், 19 கவுன்சிலர்களும் ஒரே நேரத்தில் கூட்டாக ராஜினாமா செய்வோம். இது தொடர்பாக நகராட்சியின் மொத்தமுள்ள 23 கவுன்சிலர்களில் 19 பேர் ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளோம். அக் ஷதா மீண்டும் பொறுப்புக்கு வந்தால், அவர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை நிச்சயம் அழித்து விடுவார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை