தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை பலி
நெலமங்களா: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த, இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. பெங்களூரு ரூரல் பைதரஹள்ளியில் வசிப்பவர் அன்னய்யா. இவரது மனைவி ரித்து. தம்பதியின் இரண்டு வயது மகன் சிராக். நேற்று முன்தினம் வீட்டின் பார்க்கிங் பகுதியில் இருந்து காரை, அன்னய்யா வெளியே எடுத்து விட்டார். காரை கழுவுவதற்காக தண்ணீர் தொட்டி மூடியை திறந்து வைத்து விட்டு, வீட்டிற்குள் சென்றார். அப்போது, வீட்டில் இருந்து வெளியே வந்த சிராக், வீட்டின் முன் விளையாடினான். எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்தான். அன்னய்யாவும், ரித்துவும் வெளியே வந்து பார்த்த போது, மகனை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம்பக்கத்தில் தேடினர். தண்ணீர் தொட்டியை பார்த்த போது, சிராக் உடல் மிதந்தை கண்டு கதறி அழுதனர். குழந்தை உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.