தங்கவயலில் மார்ச் 1ல் 5 கி.மீ., மாரத்தான் ஓட்டம்
தங்கவயல்: 'போதை பொருள் இல்லாத தங்கவயல்' மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வுக்காக தங்கவயலில் 5 கி.மீ., மாரத்தான் ஓட்டம் மார்ச் 1ல் நடக்கிறது. தங்கவயல் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் கூறியதாவது: போதைப் பொருள் இல்லாத கர்நாடகாவை ஏற்படுத்த, போலீஸ் துறை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் போதைப் பொருள் இல்லாத தங்கவயலை ஏற்படுத்தவும், சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மார்ச் 1ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராபர்ட்சன் பேட்டை நகராட்சி மைதானத்தில், மார்ச் 1ம் தேதி காலை 6:30 மணிக்கு மாரத்தான் ஓட்டம் துவங்குகிறது. இதில் போலீசார், அரசு ஊழியர்கள், பொதுநல அமைப்பினர், வியாபாரிகள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். ராபர்ட்சன் பேட்டை நகராட்சி மைதானத்தில் துவங்கி, 5 கி.மீ., வரையிலான மாரத்தான் ஓட்டம், பி.எம்.சாலை, சுராஜ்மல் சதுக்கம், அம்பேத்கர் சாலை, உரிகம் ரயில் நிலையம், என்.டி. பிளாக், முருகர் கோவில், சாம்பியன் ரீப் ஹைகிரவுண்ட், கல்லறை சதுக்கம், சல்டானா சதுக்கம் வழியாக, நகராட்சி மைதானத்தில் நிறைவடையும். 'நம்ம போலீஸ்;- நம்ம பெருமை' என்ற தலைப்பில் இந்த மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.