பறிக்கப்பட்ட செயின் வீட்டுக்கே வந்த ஆச்சரியம்
சிக்கபல்லாபூர்: பெண்ணின் கழுத்தில் இருந்து பறிக்கப்பட்ட தங்க செயின், மீண்டும் அவரது வீட்டிற்கே வந்த ஆச்சரியமான சம்பவம் நடந்து உள்ளது. சிக்கபல்லாபூர் நகரின் சாம்ராஜ்பேட்டையில் வசிப்பவர் பிரியா, 34. இல்லத்தரசி. இவள் கடந்த 3ம் தேதி காலையில், தனது வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், அவர் கழுத்தில் இருந்த தங்க தாலி செயினை பறித்து விட்டு தப்பி சென்றனர். இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிக்கபல்லாபூர் நகர போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரித்தனர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி காலையில், வீட்டின் குளியலறையின் படிக்கட்டில், திருட்டு போன தங்க செயின் காணப்பட்டது. இதை பார்த்த பிரியா ஆச்சரியம் அடைந்தார். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்ப நாய்களை பயன்படுத்தி சோதனையிட்டனர். மீண்டும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரிக்கின்றனர். 'நகையை திருடியது யார். மீண்டும் நகை வீட்டுக்கு வந்தது எப்படி. இதை செய்தவர்களின் நோக்கம் என்ன' என்ற பல கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். திருடப்பட்ட நகை மீண்டும் வீட்டிற்கே வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.