பணியில் அலட்சியமாக செயல்படும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை
பெங்களூரு: ''குடிநீர் குழாய் பதிப்பு பணியில் அலட்சியமாக செயல்படும் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பெங்., குடிநீர், வடிகால் வாரிய தலைவர் மஞ்சுளா கூறியுள்ளார். இது குறித்து, அவர் கூறியதாவது: பெங்களூரில் இன்று முதல், கழிவுகளிலிருந்து விடுதலை எனும் மாபெரும் துாய்மை இயக்கம் நடக்க உள்ளது. இதற்காக, ஜி.பி.ஏ.,வுடன் பெங்களூரு குடிநீர் வாரியமும் இணைந்து செயல்பட உள்ளது. குடிநீர் குழாய் பதிப்பு பணிகளில் அலட்சியமாக செயல்படும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் குழாய் பதிப்பு பணிகளில் குடிநீர் வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் கால்வாய்களுக்கு அருகில் கற்கள், மண், சிமென்ட் எதையும் விட்டு செல்லக்கூடாது. குழாய் பதிக்கும் பணிகள் முடிந்த பகுதியில் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தால் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.பணி நடந்த இடத்தில் சாலை, சீரமைப்பு பணிகள் முடிந்தால் மட்டுமே அப்பணி முழுமை பெற்றதாக கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.