சாலை மேம்பாட்டுக்கு செலவான தொகை: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
பெங்களூரு: ''பெங்களூரில், கடந்த, மூன்றாண்டுகளில் சாலை மேம்பாட்டுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து, 30 நாட்களுக்குள் மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பெங்களூரில் உள்ள சாலைகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது. மாநிலத்தின் தலைநகரிலேயே சாலைகளின் நிலைமை மோசமாக இருப்பது வெட்கக்கேடானது. குண்டும், குழியுமாக இருக்கும் சாலைகளை பார்த்து, சுற்றுலா பயணியர் கேள்வி கேட்கின்றனர். சாலைகளை மேம்படுத்துவதாக கூறி, அடிக்கடி மானியங்கள் விடுவிக்கப்பட்டன. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என, பலரும் தங்கள் வாய்க்கு வந்த செலவு ரூபாயை சொல்லி விட்டு சென்று உள்ளனர். உண்மையிலேயே சாலை மேம்பாட்டுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டதா என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். தற்போதும் சாலையின் தரம் மோசமாகவே இருக்கிறது. மக்கள் வரிப்பணம் எங்கே, யாருடைய பாக்கெட்டுக்கு சென்றது என்பதை தெரிவிக்க வேண்டும். எனவே, கடந்த, மூன்றாண்டுகளில் சாலை மேம்பாட்டுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து, 30 நாட்களுக்குள் மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.