உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பசியின்றி பாதுகாக்கும் அன்னபூர்ணேஸ்வரி

 பசியின்றி பாதுகாக்கும் அன்னபூர்ணேஸ்வரி

- நமது நிருபர் - கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் அன்னபூர்ணேஸ்வரி கோவிலும் ஒன்றாகும். இந்த புராதன கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பக்தர்களை தன் வசம் சுண்டி இழுக்கிறது. அகஸ்திய ரிஷி காலத்தில் கட்டப்பட்ட கட்டட கலைக்கு பெயர் பெற்ற கோவிலாகும். மாநிலத்தில் ஆதி சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட பனசங்கரி, கட்டீல் துர்கா பரமேஸ்வரி, சாமுண்டீஸ்வரி, மூகாம்பிகை, சவதத்தி எல்லம்மா என, பல்வேறு கோவில்கள் உள்ளன. இவற்றில் அன்னபூர்ணேஸ்வரி கோவிலும் ஒன்றாகும். இயற்கை எழில் இயற்கை எழில் மிகுந்த, அடர்த்தியான வனப்பகுதியில், பத்ரா ஆற்றங்கரையில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பாகும். இங்கு பார்வதி தேவியின் அவதாரமான அன்னபூர்ணேஸ்வரி குடிகொண்டு, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கோவிலின் அழகு மற்றும் அற்புதத்தை வர்ணிக்க, வார்த்தைகளே இல்லை. அன்னபூர்ணா என்பதற்கு, இரண்டு அர்த்தம் வருகிறது. அன்னம் என்றால் உணவு. பூர்ணா என்றால் முழுமையான என அர்த்தமாகும். அன்னபூர்ணா என்பது முழுமையான உணவு என்பதாகும். இங்கு குடிகொண்டுள்ள அம்பாள், 'உணவு கடவுள்' என, பூஜிக்கப்படுகிறார். சிக்கமகளூரு மாவட்டத்தின், ஹொரநாடுவில் அன்னபூர்ணேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இது எட்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இவரை தரிசித்து வணங்குவோரின் வாழ்க்கையில் உணவுக்கும், உணவு தானியத்துக்கும் பற்றாக்குறையே ஏற்படாது என்பது ஐதீகம். இதனால் கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும், பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். ஆண்டு தோறும் திருவிழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஹொரநாடு இயற்கை சூழ்ந்த வனம், பசுமையான மலைப்பகுதி நிறைந்த பிரபலமான சுற்றுலா தலமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணியர், அன்னபூர்ணேஸ்வரி கோவிலுக்கு சென்றும் தரிசனம் செய்கின்றனர். தல வரலாறு ஒரு முறை சிவனும், பார்வதி தேவியும் ஏதோ காரணமாக விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கோபத்தில் பார்வதி, சிவனை விட்டு பிரிந்து மாயமாகிறார். இயற்கை சீற்றத்தை ஏற்படுத்துகிறார். இதனால் மழையின்றி உலகில் வறட்சி சூழ்கிறது. பஞ்சம் தலை விரித்தாடுகிறது. மக்கள், தேவர்கள், உயிரினங்கள் பசி, பட்டினியால் வாடுகின்றன. ரிஷிகள் பார்வதி தேவியின் கருணை வேண்டி, கடுமையான தவம் செய்கின்றனர். சிவனும் தான் வாதிட்டது தவறு என்பதை உணர்ந்து, பார்வதி தேவியின் மனதை மாற்றுகிறார். அதன்பின் சமாதானம் அடைந்த அவர், கண் முன்னே காட்சியளித்து,அனைவருக்கும் உணவளிக்கிறார். எனவே இவரை அன்னபூர்ணேஸ்வரி என, அழைக்கின்றனர். அன்னபூர்ணேஸ்வரி கோவில நுழைவாயிலின் இடது புறத்தில் தலைமை மண்டபம் உள்ளது. கோவிலின் கூரைகள் மீது அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கர்ப்ப கிரஹத்தை ஆதிசேஷன் சுற்றி வளைத்துள்ளது. கோவிலில் கொண்டாடப்படும் பண்டிகைகளில், அட்சய திரிதியையும் ஒன்றாகும். அந்த நாள் பார்வதி தேவியின் தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் அன்னபூர்ணேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கும். பக்தர்களுக்கு பலவிதமான உணவு வழங்கப்படும். பிப்ரவரியில் ரதோற்சவம் நடக்கும். ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலுக்கு வரும் பாதை, அடர்த்தியான வனப்பகுதியில் உள்ளது. இதை கடந்து வருவது, அற்புதமான பயண அனுபவத்தை அளிக்கும். கோவிலில் தினமும் காலை 9:00 மணி, மதியம் 1:30 மணி, இரவு 9:00 மணிக்கு மஹா மங்களாரத்தி நடைபெறும். எப்படி செல்வது? பெங்களூரில் இருந்து 318 கி.மீ., மங்களூரில் இருந்து 135 கி.மீ., 117கி.மீ., மைசூரில் இருந்து 247 கி.மீ., சிக்கமகளூரில் இருந்து, 88 கி.மீ., தொலைவில் ஹொரநாடு உள்ளது. இங்கிருந்து ஒரு கி.மீ., தொலைவில், அன்னபூர்ணேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, ஹொரநாடுவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை வாகனத்தில், ஹொரநாடுக்கு செல்லலாம். சொந்த வாகனத்தில் சென்றால், ஆங்காங்கே நின்று வனத்தின் இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி