உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இன்று 7வது உலக திருக்குறள் மாநாடு கோலாகலம்: பெங்களூரில் குவிந்த வெளிநாட்டு விருந்தினர்கள்

 இன்று 7வது உலக திருக்குறள் மாநாடு கோலாகலம்: பெங்களூரில் குவிந்த வெளிநாட்டு விருந்தினர்கள்

பெங்களூரு: புனித ஜோசப் பல் கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழி கூட்டமைப்பு இணைந்து, இன்று காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை உலக திருக்குறள் மாநாட்டை நடத்துகிறது. தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் திருக்குறள் மாநாட்டை நடத்துவதற்காக, பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தலைவரும், கர்நாடகா தாய்மொழி கூட்டமைப்பு தலைவருமான எஸ்.டி.குமார், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே, கர்நாடகா மட்டுமின்றி வெளி மாவட்டத்தினர், வெளிநாட்டினரை தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை செய்ய துவங்கினார். அசல் புத்தகங்கள் காலை 10:00 மணிக்கு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட 'திருக்குறள் அசல் புத்தகங்கள் காட்சி' திறந்து வைக்கப் படுகிறது. ஏழாவது உலக திருக்குறள் மாநாடு நுாலான 'திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும் மாந்த நேய மாண்புகளும்' என்ற நுாலை, இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வெளியிட, எஸ்.டி.குமார் பெற்றுக் கொள்கிறார். மாநாடு நடக்கும் முக்கிய அரங்கில் 1,300 பேர் அமரலாம். இங்கு காலை முதல் மாலை வரை தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பவர்களுக்காக சேரர், சோழர், பாண்டியர் என மூன்று அரங்குகள் தயாராக உள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் 150 இருக்கைகள் வீதம் 450 இருக்கைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு நிகழ்ச்சி 4 மணி நேரம் வீதம் 12 மணி நேரம் நடக்கிறது. ஆய்வு கட்டுரை வழங்குபவர்கள் கவுரவிக்கப் படுகின்றனர். மேலும் தமிழ் ஆர்வலர்களின் வருகை அதிகரித்தால், அவர்களுக்காக அரங்கிற்கு கீழ் பகுதியில் 600 இருக்கைகளும், கூடுதலாக வந்தால் மைதானத்திலும் இருக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அனைவரும் நிகழ்ச்சியை காணும் வகையில், ஐந்து பெரிய எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. விழாவில் பங்கேற்பதற்காக, நேற்றே, தமிழகம், சிங்கப்பூர், அமெரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் 600 பேருக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். 1,000 வள்ளுவர் சிலைகள் மாநாட்டில் கர்நாடக மாநில தமிழ் அமைப்புகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. பாவலர்கள், 50க்கும் மேற்பட்ட திருக்குறள் அமைப்புகள், தமிழ் அமைப்புகள் மற்றும் முக்கிய தமிழ் பிரமுகர்கள் பாராட்டப்படுகின்றனர். மாநாட்டை ஒட்டி, அரை அடி உயரம் உள்ள 1,000 திருவள்ளுவர் சிலைகள்; சிறப்பாளர்களை கவுரவிப்பதற்காக, கன்னியாகுமரியில் இருந்து 7வது உலக திருக்குறள் மாநாடு' என்று அச்சிடப்பட்ட 210 சால்வைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. பல்கலைக் கழகத்தின் திருவள்ளுவர் அரங்கின் நுழைவு வாயிலில், 3 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலை வைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப துறைகளில் நடக்கும் மாநாடுக்கு இணையாக பேனர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. பிற மொழிகளில் அச்சிடப்பட்ட திருக்குறளின் முதல் புத்தகங்கள் வைக்க, கண்ணாடி பேழைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. 'திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க' கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மாநாடுக்கு வருவோருக்காக, காலை சிற்றுண்டி, மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. தன்னார்வலர்கள் மாநாட்டை ஒட்டி, பல்கலைக்கழகம் விழாகோலம் பூண்டுள்ளது. மாநாட்டு ஏற்பாடுகளில் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள் தாமாக முன்வந்து தன்னார்வலர்களாக பணியாற்றி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் அருட்தந்தை விக்டர் லோபோ, பதிவாளர் சையது வாஜீத், இலக்கிய மொழிகள் துறை தலைவர் அருள்மணி, வணிகப் பள்ளியின் தலைவர் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் இயக்குநர் டாக்டர் கிறிஸ்டோ வி.செல்வம், துணை இயக்குநர் வேணுகோபால், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் மற்றும் தாய் மொழி கூட்டமைப்பு தலைவர் எஸ்.டி.குமார் ஆகியோர் செய்துள்ளனர். கூடுதல் தகவல்களுக்கு, 93437 65448, 81476 65142 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை