உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அமைச்சராவதை விட சுயமரியாதை முக்கியம் காங்கிரஸ் கொறடா அசோக் பட்டன் விரக்தி

 அமைச்சராவதை விட சுயமரியாதை முக்கியம் காங்கிரஸ் கொறடா அசோக் பட்டன் விரக்தி

பெலகாவி: ''அமைச்சர் பதவி தரும்படி யாரிடமும் சென்று கேட்க மாட்டேன். பதவியை விட சுயமரியாதையே முக்கியம்,'' என, சட்டசபை காங்கிரஸ் கொறடா அசோக் பட்டன் விரக்தியுடன் கூறினார். பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி: கட்சிக்காக எவ்வளவு பணியாற்றி இருக்கிறேன்; விசுவாசமாக உள்ளேன் என்று மேலிட தலைவர்களுக்கு தெரியும். சிறு குழந்தையை போல அமைச்சர் பதவி தரும்படி யாரிடமும் சென்று கேட்க மாட்டேன். பதவியை விட சுயமரியாதையே முக்கியம். சூழ்நிலைக்கு ஏற்ப அமைச்சரவை மாற்றப்படுகிறது. நாங்கள் பெலகாவி மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர் பதவி தரும்படி கேட்டு உள்ளோம். சித்தராமையா முதல்வராக இருந்த போது என்னை அமைச்சராக்க விரும்பினார். ஆனால் தகுதியான கொறடா தேவை என்பதால், அப்பதவிக்கு நியமிக்கப்பட்டேன். சிவகுமார் முதல்வரானதும் உரிய நேரத்தில் உங்களை அமைச்சர் ஆக்குவார் என்றும் என்னிடம் கூறினார். சித்தராமையா, சதீஷ் ஜார்கிஹோளி இடையிலான உறவு நன்றாகவே உள்ளது. ஊடகங்கள் தான் அவர்களுக்குள் பிரச்னை இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் என் அருகில் அமர்ந்திருந்தாலும் கூட சித்தராமையா என்னிடம் பேசுவது இல்லை. அவர் தீவிர அரசியலில் இருக்கிறார். அடுத்த தேர்தலுக்கும் தயாராகி வருகிறார். நான் அரசியல் இருந்து ஓய்வு பெற உள்ளதாக, எனது எதிரிகள் பொய் பரப்புகின்றனர். 2028 தேர்தலில், 25,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை உள்ளது. என் கடைசி மூச்சு வரை அரசியலில் தான் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !