மனைவி கண்முன் ஆற்றில் குதித்த கணவர் உடல் 3 நாட்களுக்கு பின் மீட்பு
சாம்ராஜ் நகர் : குடும்ப தகராறு காரணமாக, மனைவி கண் முன்னே, காவிரி ஆற்றில் குதித்த கணவரின் உடல், மூன்று நாட்களுக்கு பின், நேற்று மீட்கப்பட்டது. சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகாலின் கஜ்ஜிஹூண்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மஞ்சுநாத் - ராஜேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மஞ்சுநாத் ஓட்டுநராகவும், சமையல்காரராகவும் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரிக்கு, சமீபத்தில் அழகு நிலையம் அமைத்து கொடுத்திருந்தார். தம்பதி இடையே அடிக்கடி ஏதாவது சண்டை நடந்து கொண்டே இருக்குமாம். கடந்த 3ம் தேதி பெலக்வாடி கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் தம்பதி சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. தசனபுரா மேம்பாலத்தில் செல்லும்போது வாக்குவாதம் எல்லை மீறியதால், கோபமடைந்த மஞ்சுநாத், வாகனத்தை நிறுத்தி விட்டு, பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதித்தார். இதை பார்த்து மனைவி ராஜேஸ்வரி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு படையினர் மஞ்சுநாத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலையில் அவரின் உடல், காவிரி ஆற்றில் கரை ஓதுங்கியது. கொள்ளேகால் நகர போலீசார் விசாரிக்கின்றனர்.