சட்டவிரோதமாக ஆர்.சி., புக் வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு
பெங்களூரு: லோக் ஆயுக்தா அளித்த புகாரின் அடிப்படையில், சட்டவிரோதமாக தனி நபர்களின் வாகன பதிவு சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமங்களை வைத்திருந்ததாக, மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். துணை லோக் ஆயுக்தா நீதிபதி பனீந்திரா, கடந்த 8ம் தேதி பெங்களூரு நகரின் யஷ்வந்த்பூர், ராஜாஜி நகர், ஜெயநகர், எலஹங்கா, கஸ்துாரி நகர், கே.ஆர்.புரம் ஆகிய ஆறு ஆர்.டி.ஓ., எனும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் திடீரென சோதனை நடத்தினார். அப்போது, கஸ்துாரி நகரில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்புறம் உள்ள ரஜினிகாந்த், மனோஜ் குமார் ஆகியோருக்கு சொந்தமான மாருதி மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் கடையில், 49 வாகன பதிவு சான்றிதழ்கள், 83 ஓட்டுநர் உரிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபோன்று பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான ஸ்ரேயாஸ் ஓட்டுநர் பள்ளியிலும் வாகன பதிவுச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார். இதையடுத்து, ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலையில், ரஜினி காந்த், மனோஜ் குமார், பிரசாந்த் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் ஒருவர் மீதும் கூட வழக்கும் பதிவாகவில்லை.